அந்துமணி பா.கே.ப.,
பா'லாக் டவுன்' எல்லாம் முடிந்து, நிலைமை ஓரளவு சீராகவும், மழைக்காலம் துவங்கி இருப்பதால், ரொம்ப நாளைக்கு பின் என் சைக்கிளை, 'சர்வீஸ்' செய்ய விட்டுள்ளேன். எனவே, சக தோழரின், 'பைக்'கில் தொற்றிக் கொண்டு, டீ வாங்கி வர சென்றேன்.பின் சீட்டில் அமர்ந்திருந்ததால், சாலையில் ஓடும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி சென்றேன்.பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து இன்னும் முழு வீச்சில் வராததால், சாலையில், சொகுசு கார்கள் முதல் ஏகப்பட்ட மாடல்களில் புது கார்களும், பைக்குகளும் சீறி பாய்ந்தபடி சென்றன.ஆட்டோக்களில், பயணிகள் நெருங்கி அமர்ந்து சென்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக என்னைப் போன்ற சைக்கிள் ஓட்டிகளையும் காண முடிந்தது.எந்த வண்டியானாலும், அதன் பதிவு எண்ணையும், மாடலையும் பார்ப்பது என் வழக்கம். அப்படி பார்த்தபோது, இன்னொரு விஷயமும் கண்ணில் பட்டது.அது...கார் அல்லது பைக்குகளின் பின்பக்கம் விதவிதமான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. உதாரணத்துக்கு சில...வேக் அப் நியூ; டாடிஸ் கிப்ட்; மம்மிஸ் கிப்ட்; என் சமூகம் உனக்கு முன்னால் செல்லும்; என்னை கெட்டவன் என்று நல்லவர்கள் சொல்லட்டும்; நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை...சில வண்டிகளில், மத சின்னங்களும், அது சம்பந்தமான வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.சில ஆட்டோக்களில், ஆர்.டி.ஓ., அறிவுறுத்தல்படி, அதிக கட்டணம் வசூல் புகாருக்கு, 'டோல் ப்ரீ' எண்... என்று குறிப்பிடப்பட்டிருந்தது.தமிழக அரசு துறை வாகனங்களில் குறிப்பாக, 'மகேந்திரா பொலீரோ ஜீப்'கள் பெரும்பாலானவற்றில், 'லிவ் யங் லிவ் ப்ரீ' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளன.சில காலத்துக்கு முன்வரை, அரசின் விழிப்புணர்வு வாசகங்களாக, வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்; மரம் வளர்ப்போம்; மழை வளம் காண்போம்; காற்று மாசு உயிருக்கு ஆபத்து போன்றவை இடம்பெற்றிருந்தன.இப்போதுள்ள சோதனை காலத்தில், அதற்கேற்ப வாசகங்கள் இடம்பெறாதது ஏன்? அப்படி செய்தாலாவது, மக்களுக்கு இன்னும் சற்று விழிப்புணர்வு ஏற்படுமே! சரி போகட்டும். அந்த, 20 நிமிட பயணத்தில், குறைந்தபட்சம், 100 வண்டிகளையாவது பார்த்திருப்பேன்.'இந்த வாசகங்களுக்கு எல்லாம் அர்த்தம் என்ன என்று, ஆபீஸ் பையனான எனக்கு புரியவே இல்லை...' என, சக தோழரிடம் புலம்ப தான் முடிந்தது. இரண்டாவது, இப்படி எழுதுவதால் யாருக்கு என்ன லாபம்... தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள், வாசகர்களே!பின் குறிப்பு: 'டெம்போ' எனப்படும் சரக்கு வாகனங்களில், நம் தேசிய கொடி இடம்பெற வேண்டும் என்று, ஒரு விதி உள்ளது. ஐயகோ! காவி நிறமும், பச்சை நிறமும் வெளுத்து, வேறு ஒரு நிறத்திலும், 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம், பெயின்டருக்கு தோன்றும் எண்ணிக்கையிலேயே வரையப்பட்டுள்ளது.- தேசிய கொடிக்கு வந்த சோதனையை நினைத்து, வருத்தப்படத்தான் முடிந்தது.கேஒரு காலத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளராகவும், அரசியல் கட்சியிலும் அங்கம் வகித்தவர் அவர். இன்று, சென்னை புறநகர் பகுதி ஒன்றில், அமைதியான வாழ்க்கை வாழ்பவர். என்னை சந்திக்க விரும்பி பலமுறை, 'திண்ணை' நாராயணன் மூலமாக சொல்லி அனுப்பியிருந்தார்.'கொரோனா' பிரச்னை மற்றும் 80 வயதான அவரை அலைகழிக்க வேண்டாமே என்ற எண்ணத்தில், சந்திப்பதை தள்ளிப்போட்டு வந்தேன்.கடந்த வாரத்தில் ஒருநாள், 'திண்ணை' நாராயணனுடன் நேரிலேயே வந்து விட்டார். அவரை பார்த்தால், 80 வயது என்றே சொல்ல முடியாது. முறையாக உடற்பயிற்சி, யோகா மற்றும் உணவு பழக்கம், அவரை இன்றும் இளமையாகவே வைத்திருக்கிறது.நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர் என்று, ஏற்கனவே, நாராயணன் கூறியுள்ளார்.அவர் வந்திருக்கும் தகவல் அறிந்து, லென்ஸ் மாமாவும் வந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 'கற்றோரை கற்றோரே காமுறுவர் என்பது போல், ஒரே வயதுடையோர் சேர்ந்தால் பேச விரும்புவர் தானே...' என்று, நாராயணன் முணுமுணுக்க, அவரை முறைத்தார், மாமா. பல விஷயங்கள் பேசிய பின், அக்கால சினிமா துறையில் நடந்த சில கூத்துக்களை சொல்ல ஆரம்பித்தார்:*ஹிந்தி பட உலகின் இணையில்லா, 'ஸ்டென்ட்' கதாநாயகன், ஜான்கவாஸ். இவர் கதாநாயகனாகவும், கே.ஆர்.செல்லம் கதாநாயகியாகவும் நடித்த படம், வனராஜ கார்ஸன். தமிழில், முதன்முதலில் காடுகளில் படமாக்கப்பட்ட இந்த படம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.முக்கால் நிர்வாண நீச்சல் உடையில், கே.ஆர்.செல்லம் நடித்திருந்தார். ஒரு காட்சியில், நீச்சல் உடையில் உலா வந்து கொண்டிருந்தவரை கண்டு, கிறுகிறுத்துப் போகிற காட்டு மனிதன், அவரை அலாக்காக துாக்கி ஓடுகிறான். கை, காலை உதறுகிறார், கே.ஆர்.செல்லம்.கவர்ச்சிகளை கண்டு குஷி கொள்கின்றனர், ரசிகர்கள். 'அய்யோ, ஆபாசம்...' என்று, கண்டன முழக்கமிட்டன பத்திரிகைகள்.பத்திரிகைகளில் கண்டனத்தை கண்ட பிறகு, நடிகை கே.ஆர்.செல்லம் என்கிற கனகவல்லி, 'ஒப்பந்தத்தை படிக்காமல், தெரியாத்தனமாக நான் கையெழுத்து போட்டு, தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டு விட்டேன். வனராஜ கார்ஸன் படத்தில் இந்த மாதிரி நடித்ததற்காக, மிகவும் வருந்துகிறேன்...' என்று, ஒரு அறிக்கை விட்டார்.* சரஸ்வதி என்று ஒரு நடிகை. அவரை, 'மாயவரம் பாப்பா' என்று, பிரியமாக அழைப்பர். புல்லாங்குழல் வாசிப்பதில் புகழ் பெற்றவர். இவரை, சீதா பஹரணம் என்ற படத்தில், சீதையாக நடிக்க ஒப்பந்தம் செய்தனர். பாப்பாவுக்கு, தான் நடிக்கும் படத்திலும் புல்லாங்குழல் இசை புலமையை காண்பிக்க வேண்டும் என்று ஆசை. சீதை, புல்லாங்குழல் ஊதியதாக எந்த புராண இதிகாசத்திலும் இல்லை. அதனால் என்ன... பாப்பாவின் ஆசை, சீதா பஹரணம் படத்தில் நிறைவேறவே செய்தது.* ஒரு படத்தில், கவர்ச்சி நடிகை கே.தவமணி தேவிக்கு, வில்லி வேஷம். வில்லன், டி.எஸ்.பாலையாவை, நடனமாடி, மயக்க வேண்டும். படப்பிடிப்புக்கு வந்த தவமணி தேவியை கண்டு, இயக்குனர் உட்பட அனைவரும் அசந்து போயினர். உள்ளே, 'பிரா'வும் போடாமல், இரண்டு மார்பும், வெளியே தெரியும்படியாக, முன் பக்கம் தைக்கப்படாத ரவிக்கையை அணிந்திருந்தார். ரவிக்கையின் இருபுறங்களையும் இணைத்து தைத்துக் கொள்ளுமாறு சொன்னார், இயக்குனர், சாமி.'வில்லனை மயக்கும் நடனம்தானே, இப்படி இருந்தால்தானே இயற்கையாக இருக்கும்...' என்று சொல்லி மறுத்து விட்டார், தவமணி தேவி.நடிகையிடம், பட அதிபர் சோமு பேசினார். சமரசம் ஏற்பட்டது. தவமணி தேவியின் மேலாடை நடுவில் ஒரு பெரிய காகிதப் பூவை சொருகிக் கொள்வதே, அந்த உடன்பாடு.தமிழ் சினிமாவுக்கு, இலங்கையிலிருந்து இறக்குமதி ஆனவர், இந்த தவமணி தேவி.* மாடர்ன் தியேட்டர்ஸ், ஆரவல்லி படத்தில், ஆரவல்லியை, கழுதைப் பாலில் குளிக்க வைக்கும் காட்சிக்காக, ஆயிரம் கழுதைகளை ஓட்டி வரச்செய்தார், டி.ஆர்.சுந்தரம். புராண கால வேஷமிட்டு, தொழிலாளர்கள், பால் கறக்க கழுதைகளிடம் போனபோது, 'படார், படார்' என, அவை உதைத்தன. பின்னர், பயிற்சி கொடுத்து, படத்தில் சில நிமிடங்களே இடம்பெறும் இந்த காட்சியை படமாக்கினார். ஆரவல்லியாக நடித்தவர், ஜி.வரலெட்சுமி.- இப்படி அவர் கூறி முடித்ததும், அங்கு வெடி சிரிப்பு எழுந்தது.அன்று இருந்த நிலைமைக்கும், இன்று இருப்பதற்கும் ஒன்றும் வித்தியாசம் அதிகம் இல்லை. என்ன அன்று இருந்த ரசிகர்களுக்கு, நடிகர்களை பற்றி விமர்சிக்கவோ, கலாய்க்கவோ வசதி இல்லை.ஆனால், இன்று, 'இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ் - ஆப், இன்ஸ்டாகிராம்' போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன. இதனால், உடனுக்குடன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது, அடுத்த வினாடி, 'கமென்ட்' போட்டு கலாய்த்து விடுவர்.கொஞ்ச நேரம், 'ரிலாக்ஸ்' ஆக இருக்க வைத்ததற்காக, அவருக்கு நன்றி கூறி, அனுப்பி வைத்தேன்.