கேமரூனின் அடுத்த படம்!
'டைடானிக்' மற்றும் 'அவதார்' என உலகளவில், 'ஹிட்' கொடுத்த, ஜேம்ஸ் கேமரூன், தன் அடுத்த படத்தை, ஜப்பானியரான சுடோமோ யாமக்குச்சி என்பவரது வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்க உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது, ஆக., 6, 1945ல், ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட சமயம், அங்கு இருந்தவர்களில் இந்த யாமக்குச்சியும் ஒருவர். காயமடைந்த யாமக்குச்சி, ஹிரோஷிமாவிலிருந்து புறப்பட்டு நாகசாகிக்கு வர, ஆக., 9ம் தேதி அங்கும் அணுகுண்டு வீசப்பட்டது. இதிலும் தப்பிப்பிழைத்த யாமக்குச்சி, 1957ல், ஜப்பானிய அரசால், அணுகுண்டால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டது.ஜேம்ஸ் கேமரூன், பலமுறை யாமக்குச்சியை நேரில் சந்தித்து, அவரது அனுபவங்களை கேட்டு தொகுத்து வைத்துள்ளார். தம் 93வது வயதில், ஜன., 4, 2010ல், குடல் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார் யாமக்குச்சி. அணுசக்தியை, மின் உற்பத்தி போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தினால், விளைவுகள் கொடூரமாக இருக்கும் என, பாடம் புகட்டுவது போல், கேமரூனின் திரைப்படம் அமையும் என்கின்றனர். — ஜோல்னா பையன்.