எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
நம் அண்டை நாடான, சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞரின் செயல், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இளைஞர், ஒரு பெண்ணை காதலித்தார். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண், காதலை முறித்து விட்டார். காதலியை சமாதானப் படுத்துவதற்காக, பல வழிகளிலும் முயற்சித்துப் பார்த்த அந்த இளைஞருக்கு, தோல்வி தான் கிடைத்தது.இறுதியாக, காதலியின் வீட்டின் முன், சாலையில் மண்டியிட்டபடி அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார். இரவு பகலாக அந்த இடத்திலேயே அவர், தொடர்ந்து மண்டியிட்டபடி இருப்பதை அறிந்து, ஏராளமானோர் கூடினர். 20 மணி நேரம் இந்த போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், போலீசார் தலையிட்டு, அவரை அழைத்துச் சென்றனர். ஆனாலும், 20 மணி நேரம் மண்டியிட்டபடி அந்த இளைஞர் போராட்டம் நடத்தியும், அவரது காதலியின் மனம் இரங்கவில்லை என்பது தான், வேதனையானது.— ஜோல்னாபையன்