அதிசயங்கள் நிகழட்டும்!
அக்., 28, நின்றசீர் நெடுமாறர் குருபூஜைகடவுளின் அருள் மட்டும் நமக்கு கிடைத்து விட்டால், அதிசயங்கள் நிகழ்ந்தே தீரும் என்பதற்கு எடுத்துக்காட்டு, நின்ற சீர் நெடுமாறரின் வாழ்க்கை.மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் ஆட்சி புரியும் மதுரையில், சைவத்தை தன் கண்ணெனப் போற்றி வளர்த்து வந்தார், மங்கையர்க்கரசி. இவரது இயற்பெயர் மானி; சோழநாட்டு ராஜகுமாரியான இவர், பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை மணந்தார். முன்வினை பயன் காரணமாக, மன்னனுக்கு கூன் விழுந்திருந்ததால், இவரை, 'கூன் பாண்டியன்' என்று கூறுவர்.இந்நிலையில், மதுரை மண்ணில் கால் வைத்தனர் சமணர்கள். அவர்களது கருத்துகள், நின்றசீர் நெடுமாறனுக்கு பிடித்துப் போக, சமண மதத்தை பின்பற்ற ஆரம்பித்தார்.'தாய் மதத்தை விட்டு, பிற மதத்தை பின்பற்றினால், மதுரையில், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் வழிபாடு என்னாகும்....' என வருந்திய மங்கையர்க்கரசி, தன் கணவரை, தாய் மதத்துக்கு திருப்ப, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதுடன், கணவனின் மனநிலையை மாற்றும்படி சுந்தரேஸ்வர பெருமானை மனமுருக வேண்டி வந்தார்.இந்நிலையில், வேதாரண்யத்தில் திருஞான சம்பந்தர் தங்கியிருக்கும் செய்தி அறிந்து, அவரை மதுரைக்கு அழைத்து வந்தால், மன்னனின் மனம் மாறும் என நினைத்து, அமைச்சர் குலச்சிறையார் மூலமாக, திருஞான சம்பந்தரை, மதுரைக்கு வரவழைத்தார் மங்கையர்க்கரசி.இதையறிந்த சமணர்கள், அவர் தங்கியிருந்த மடத்துக்கு தீ வைத்தனர். உடனே சம்பந்தர், 'அக்னியே... நீ சென்று சைவத்தை கை விட்ட மன்னனை பற்றுவாயாக...' என உத்தரவிட்டார்.அக்னியும், மன்னனிடம் சென்று, அவனை வெப்பு நோயாக பற்றியது; சூடு தாங்காமல் சிரமப்பட்டான் மன்னன். என்னென்னவோ செய்து பார்த்தும், நோயை குணமாக்க முடியவில்லை. அதனால், 'சம்பந்தர் வந்தால் தான் நோய் குணமாகும்...' என, மங்கையர்க்கரசியார் கணவரிடம் சொல்லவே, ஒரு வழியாக மன்னனும் சம்மதித்தான்.சம்பந்தர் வந்தார்... 'இந்த நோயைப் போக்க, எம்பெருமான் சுந்தரேஸ்ரவரனுக்கு சமையல் செய்யும் மடப்பள்ளி சாம்பல் போதாதா... இதோ... இதையே திருநீறாகப் பாவித்து, உன் உடலில் தடவு; எல்லாம் சரியாகி விடும்...' என்று கூறி,மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறுதந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறுசெந்துவர் வாய் உமை பங்கன்திருஆலவாயான் திருநீறே!என்று ஆரம்பித்து, திருநீற்று பதிகம் பாடினார்.நின்ற சீர் நெடுமாறனும், மடப்பள்ளி சாம்பலை திருநீறாகக் கருதி, உடலில் தடவ, நோய் குணமானது. அது மட்டுமல்ல, அவனுடைய கூனும் நிமிர்ந்து விட்டது. கூன் பாண்டியனாக இருந்தவர், அன்று முதல் நின்ற சீர் நெடுமாறர் ஆனார்.இவரது குருபூஜை, ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் நடைபெறும். இந்நாளில், நாயன்மார் சன்னிதியிலுள்ள நின்றசீர் நெடுமாறரை வணங்கி, அவருக்கு நிகழ்ந்த அதிசயம் போல், நம் வாழ்விலும், அதிசயம் நிகழ வேண்டுவோம்!தி.செல்லப்பா