உள்ளூர் செய்திகள்

சென்னையின் பாற்கடல்!

சென்னையில், வங்கக்கடல் தானே இருக்கிறது. பாற்கடல் எங்கே இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள்!காஞ்சி, மகா பெரியவர், வங்கக்கடலை, பாற்கடலாக உருவகம் செய்து, அதன் கரையில் ஒரு கோவிலை அமைக்க செய்தார். அதுவே, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில். வரலட்சுமி விரதத்தை ஒட்டி, இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.திருப்பாவையின் கடைசி பாடலில், பாற்கடலை, வங்கக்கடல் என, வர்ணிக்கிறாள், ஆண்டாள்.'வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை' என, ஆரம்பிக்கிறது, இந்த பாடல். ஆண்டாளின் வாக்குப்படி, வங்கக்கடலை பாற்கடலாக உருவகம் செய்து, கோவில் அமைக்க ஆணையிட்டார், பெரியவர். பக்தர்களும், அவரது ஆணையை, ஆசையை நிறைவேற்றினர். ஒரு கடற்கரையில், லட்சுமிக்கு கோவில் அமைக்க வேண்டிய அவசியம் என்ன!பாற்கடலில் தான் லட்சுமி அவதரித்தாள் என்கிறது, புராணம். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சாகா மருந்தான அமிர்தம் வேண்டும் என, ஆசைப்பட்டனர். கடலைக் கடைந்தால் தான், அமிர்த கலசம் வெளிப்படும் என்ற நிலை இருந்தது. கடலைக் கடைய வேண்டுமானால், எவ்வளவு பெரிய மத்து வேண்டும். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் வைத்து, இருதரப்பினரும் கடலைக் கடைந்தனர்.இந்த சமயத்தில், பாற்கடலில் இருந்து, காமதேனு எனும், எதையும் தரும் தெய்வப் பசு, உச்சைசிரவஸ் எனும் குதிரை, ஐராவதம் என்ற யானை, கற்பக விருட்சம், அமிர்த கலசம் ஏந்திய தன்வந்திரி, அகலிகை மற்றும் லட்சுமி ஆகியோர் வெளிப்பட்டனர். இவர்களில், மகாவிஷ்ணுவை கணவராக ஏற்றாள், லட்சுமி.மகாலட்சுமி, அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் வல்லமை கொண்டவள் என்பதால், அஷ்டலட்சுமியாக, எட்டு வடிவங்களில் வணங்கப்பட்டாள்.ஆதிலட்சுமி, தானியலட்சுமி, தைரியலட்சுமி, சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, கஜலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் தனலட்சுமி ஆகிய இந்த லட்சுமிகள், பெசன்ட்நகர் கோவிலில், மூன்று அடுக்குகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இந்த லட்சுமிகள், கேட்ட வரம் தருபவர்கள் என்பதால், வரலட்சுமி என்ற பெயரிலும் அழைத்தனர். வரலட்சுமி விரதம், சுமங்கலிகளுக்கும், கன்னிப்பெண்களுக்கும் ஆனது.வரும், 31ம் தேதி, வரலட்சுமி விரதத்தன்று, பெசன்ட்நகர் சென்று, வங்கக்கடலை, பாற்கடலாகக் கருதி, இயற்கை வழிபாடு செய்தும், அஷ்டலட்சுமிகளை வரலட்சுமியாக கருதி, ஆன்மிக வழிபாடு செய்தும் வரலாம். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !