உள்ளூர் செய்திகள்

திண்ணை!

ஜெயகாந்தன் எழுதுகிறார்: தமிழகத்தில் மெய்யாகவே மதுவிலக்குச் சட்டம் அமல் செய்யப்பட்ட காலம் இருந்தது. மீண்டும் தெருவெல்லாம், மதுக்கடைகள் பெயர் பலகை தாங்கி நிற்கும் என்று ஒருவரும், அந்த காலத்திலும் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது. மிகவும் மேல்மட்டத்திலும், மிகவும் கீழ்மட்டத்திலும் மது மறைந்து வாழ்ந்ததால், சமூக நாகரிகம் சற்று மேலானதாகவே இருந்தது. எனினும், சிற்சில சமயங்களில், மதிப்பு மிகுந்தவர்களையும், மாற்றுக் கட்சிக்காரர்களையும் பழி வாங்குகிற முறையில், அந்த சட்டம் அக்காலத்திலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது.கடந்த, 1967ல் ஆட்சி மாற்றம் (தி.மு.க.,) நேர்ந்ததும், நேற்று வரை ஆளுங்கட்சி ஆதரவில் இருந்தோர், இது மாதிரி பழிவாங்குதலுக்கு இரையாகக் கூடும் என்று நான் அஞ்சினேன். தி.மு.கழகத்திடம் ஆட்சிப் பொறுப்பை, ஒப்படைக்க சில தினங்களே இருந்தன. தமிழக அரசின் உள்துறை இலாகா அமைச்சராக, கக்கன்ஜி இருந்தார்.பதவியை அவர் காலிசெய்யத் தயாராக இருந்த ஒரு விசேஷமான சூழ்நிலையில், கக்கன்ஜியை, அவரது அலுவலக அறையில், அப்போது சந்தித்தேன். வெள்ளை சிரிப்புடன், அவர் என்னை கை குவித்து வரவேற்ற போது, அவருக்கு பின்னால் சுவரிலிருந்த காந்திஜி, அவரது மதுவிலக்கு விரதத்தைப் பற்றியும், நான் யோசித்து கொண்டே, 'நான் மது பர்மிட் கேட்டு வந்திருக்கிறேன்...' என்று கேட்டு கொண்டேன்.அமைச்சரின் முகத்தில், தேர்தலில் தோற்றதினால் கூட ஏற்படாத வருத்தத்தின் நிழல் படர்வதை கண்டேன். 'உங்களுக்கு அது தேவைதானா? காலமெல்லாம் நாங்கள் மதுவிலக்குக்கு போராடினோம். கடைசியில், போயும் போயும், இந்த இலாகாவை என்னிடம் தந்து விட்டனர். நல்ல வேளையாக, இந்தப் பாவத்திலிருந்து சீக்கிரம் விடுதலை பெறப் போகிறேன். இந்த நேரத்தில், நீங்கள் வந்து கேட்கிறீர்களே...' என்று, மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டார். அவரது உணர்ச்சிகளும், மனமும் எனக்கு புரிந்தது.எனினும், 'நான் காங்கிரசை தீவிரமாக ஆதரித்து பிரசாரம் செய்கிறவன். கடந்த காலத்தில், அரசியல் பழிவாங்கும் உணர்ச்சியோடு தி.மு.கழகத்தினர் பலர், இந்த மதுவிலக்கு சட்டத்தினால், அவமதிக்கப்பட்டதில்லை என்று நீங்கள் சொல்ல முடியாது. அப்படியொரு நிலைமையை நாளைக்கு நான் சந்திக்க வேண்டாம் என்பதால் தான் இதை கேட்கிறேன்...' என்று விளக்கினேன்.'சரி... இதுவே நான் மது பர்மிட்டில் போடுகிற கடைசி கையெழுத்து!' என்று சொல்லி, சான்றிதழில் கையொப்பமிட்டார் கக்கன்ஜி.***டால்ஸ்டாய் தன் இலக்கியங்களால், ரஷ்யாவில் புகழ் பெற்றிருந்த நேரம். ஓவியர்களும், சிற்பிகளும் அவர் உருவத்தை ஓவியமாகவோ, சிற்பமாகவோ படைப்பாக்க விரும்பி, அவரை பலமுறை அணுகினர். எழுத்து வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த டால்ஸ்டாய், இதற்கு சம்மதிக்கவில்லை. ஒருமுறை மாஸ்கோவில், ஒரு பிரபல ஓவியக்கூடம் டால்ஸ்டாயின் உருவப்படத்தை வரைந்து வருமாறு, ஒரு புகழ்பெற்ற ஓவியனை, அவரிடம் அனுப்பி வைத்தது.ஓவியன், டால்ஸ்டாயிடம் எவ்வளவோ வற்புறுத்தியும், 'முடியாது, முடியாது' என்ற, வார்த்தைகளே அவரிடமிருந்து கோபத்துடன் வெளிப்பட்டன. கடைசியாக மனம் தளர்ந்து, வெளியே போக மூட்டை கட்டினான் அந்த ஓவியன். அப்போது, அவரிடம் அவன் கூறினான்: தங்களுடைய கருத்துக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். ஆனால், தங்களுடைய படம் ஒன்று, எப்படியும் ஓவியக்கூடத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை!'எப்படி?' என்று கேட்டார், டால்ஸ்டாய்.'அந்தப் படத்தை நானோ அல்லது வேறு எவனோ தற்போது வரையாவிட்டாலும், யாரோ ஒருவன், 30, 40 ஆண்டுகளுக்கு பின் வரைந்தே தீருவான். ஆனால், அது ஊகத்தின் மூலம் வரையப்பட்ட சித்திரமாக இருக்குமேயன்றி, உண்மைச் சித்திரமாக ஒரு போதும் இருக்காது!'இதைக் கேட்டதும் டால்ஸ்டாயின் மனம் சிந்திக்கத் துவங்கி விட்டது. அவருடைய எதிர்ப்பு தளர்வுற்றது. ஓவியக் கூடத்திற்கு ஒன்றும், தன் குடும்பத்திற்கு ஒன்றுமாக, இரண்டு ஓவியங்கள் வரையுமாறு, அந்த ஓவியனிடம் கேட்டுக் கொண்டார் டால்ஸ்டாய்.— 'டால்ஸ்டாய் ஒரு பார்வை' நூலிலிருந்து...நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !