அன்புடன் அந்தரங்கம்!
அன்பு சகோதரிக்கு —எனக்கு மூன்று மகன்கள்; அனைவரும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள். மூத்த மகன், தன்னைவிட நான்கு வயது மூத்த பெண்ணை விரும்புகிறான். அப்போது அவன் வயது, 21. நானும் என் கணவரும், வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், முதலில் இதை அறியவில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகே தெரிய வந்தது. அவனிடம் விசாரித்து, அறிவுரை கூறினோம். இருந்தும், அவனால், அவளை மறக்க முடியவில்லை என்று, கூறுகிறான்.எங்கள் குடும்பம் மிகவும் பண்பான குடும்பம்; ஓரளவு வசதியுள்ளவர்கள். அந்தப் பெண், பல ஆண்களுடன் பழக்கம் வைத்திருப்பவள். இவனுக்கு அந்த விஷயம் தெரிந்தும், அவளை நல்லவள் என்று கூறுகிறான். யார், என்ன சொன்னாலும், எடுத்தெறிந்து பேசுகிறான். தற்போது, என் மகனுக்கு, 27 வயது; திருமணம் செய்யலாம் என்றால், மறுக்கிறான்.அவளுக்கு தந்தை இல்லை; தாய் மட்டும் உண்டு. உடன் பிறந்த அண்ணன்கள் இருவர் உள்ளனர். எல்லாருமே அவளுக்கு உடந்தையாக இருக்கின்றனர். அவளிடம் வரம்பை மீறி பழகி இருக்கிறான் என் மகன். தற்போது ஓரிடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அவள் உடன் பிறந்தவர்கள் ஓரளவு சம்பாதிக்கின்றனர். இந்நிலையில், நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.நான் மிகவும் மனம் உடைந்து விட்டேன்; என் உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இன்னும், ஒரு பிள்ளைக்கும் திருமணம் ஆகவில்லை; எல்லாரிடமும் நல்ல பெயரே வாங்கி உள்ளேன்.நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் அவனுக்கு அறிவுரை கூறி விட்டனர். அவன் யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை. தற்போது, நான் உயிரோடு இருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது. என் பிரச்னைக்கு தக்க ஆலோசனை கூறுங்களேன்.— இப்படிக்கு, அன்பு சகோதரி.அன்பு சகோதரிக்கு —'என் மகன் மீது அளவு கடந்த பாசமும், நம்பிக்கையையும் வைத்திருந்தேன். அவனோ தன்னை விட நான்கு வயது மூத்த பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறான். எனக்கு ஒரு நல்ல தீர்ப்பைத் தாருங்கள்...' என்று, எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன்.மகன், தன்னை விட நான்கு வயது மூத்த பெண்ணை விரும்புகிறான், யார் எடுத்துக் கூறினாலும் அவளை மறக்க இயலவில்லை என்றும், அவளை நடத்தை கெட்டவள் என்று கூறியபோதும், அவளை மறக்க மறுக்கிறான். இதனால், உங்கள் மனமும், உடலும் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாவதாக எழுதியிருக்கிறீர்கள்.இன்னும் ஒரு பையனுக்கும் திருமணம் முடிக்கவில்லையே என்ற எண்ணமும், எல்லாரிடமும் நல்ல பேர் வாங்கியிருக்கும் நாம் இந்த விஷயத்தில் தோற்றுப் போய் விடுவோமோ என்ற அச்சமும், அவநம்பிக்கையும் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், உறவினர் மத்தியில் பெரிய அவமானமாகி விடும் என்று பயப்படுகிறீர்கள்.கடிதத்தைப் படித்து முடித்தவுடன் மிகவும் அப்பட்டமாக, உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிந்தது, உங்கள் மகன் மீது நீங்கள் வைத்திருக்கும் அளவுக்கதிகமான பாசம்! அது முற்றிப் போய், 'பொசசிவ்னஸ்' ஆகி, 'என் பையன் எனக்கு மட்டும் தான்' என, நினைத்து உங்கள் கைக்குள் அவரை வைத்திருக்க முடிவு செய்து, உங்கள் அணுகுமுறையை மாற்றியமைத்து உங்களுக்கும், அவருக்கும் புரிதல் இல்லாமையை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.உளவியல் ரீதியாக, பொதுவாக அம்மாக்களுக்கு தங்களின் பெண்களைக் காட்டிலும், பையன்களையும், அப்பாக்களுக்கு தங்களின் பையன்களைக் காட்டிலும், மகள்களையும் அதிகம் பிடிக்கும். அது மிக சரியாக, சற்றே அதிகமாக உங்களது வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருவிதமான, 'காம்ப்ளெக்ஸ்!'உங்கள் பையன் நான்கு வயது மூத்த பெண்ணை விடுத்து, நான்கு வயது இளைய பெண்ணைக் காதலித்தாலும், உங்கள் மனது இப்படித் தான் அடித்துக் கொள்ளும். நிச்சயமாய் இச்செயல் உங்களின் ஒருதலைப்பட்சமான உணர்வைத் தான் வெளிப்படுத்துகிறது.இந்த மாதிரி நம் மகனைப் பற்றி நினைப்பது சரியா என்று, நீங்கள் யோசிக்க வேண்டும். மாஸ்டர் டிகிரி முடித்த பையன் ஐந்து ஆண்டுகளாக, வயதில் மூத்த பெண்ணை நேசிக்கிறான் என்றால், அவர் யோசித்து செய்திருக்க மாட்டாரா? அவருக்கு, தானே சிந்திக்கும் திறன் இல்லையா? நீங்கள் சொல்வது போல நடத்தை கெட்டவளிடம் தெரியாமல் பழகிக் கொண்டிருக்கிறார்; அதுவும் பெற்ற தாயார் மனது நோகடித்து, பிடிக்காமல் அப்பெண்ணை நேசிப்பாரா?சரி, நீங்கள் என்ன செய்யலாம்...* உங்கள் மகனிடம் உணர்வுப்பூர்வமாக இல்லாமல், அறிவுப்பூர்வமாக இந்த பிரச்னையை பற்றி பேச முயலுங்கள்.* முடிந்தால், அவருக்கு பிடித்த, அவரைப் புரிந்து கொண்டு உதவி செய்யும் குணம் கொண்ட உறவினர், ஓரிரு நபர்களுடன் கலந்து ஆலோசனை செய்ய வைக்கலாம். அத்தருணத்தில், உங்களது ஆசைகளை, குமுறல்களை எக்காரணத்தைக் கொண்டும் கொட்டி விடாதீர்கள்.* தேவையிருப்பின் அந்த பெண்ணிடம், கோபப்படாமல் அன்புடன் பேசிப் பார்த்து, அவளது எதிர்பார்ப்புகள், திட்டங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை தன் நிலையை உணர்ந்து, மனம் திருந்தலாம் அப்பெண்.* 'அதெல்லாம் முடியாது; கல்யாணம் தான் பண்ணிக் கொள்வேன்...' என்று, இரண்டு பேரும் உறுதியாக இருந்தால், பெருந்தன்மையாக அவர்களை ஏற்றுக் கொள்வது நல்லது.* நீங்கள் பிடிவாதமாக இருக்கும் பட்சத்தில், உங்களின் சம்மதம் இல்லாமல் அவர்கள், கல்யாணம் செய்து கொள்ளலாம்.* திருமணத்திற்கு பின், உங்களது குடும்ப கவுரவம், பாரம்பரியம் பற்றி பக்குவமாய் பேசி, இருவரையும் பொறுப்புள்ள நபர்களாக மாற்றலாம்.* இவற்றை விடுத்து, நாம் சொல்வதை மகன் கேட்கவில்லை, நாம் நினைத்த மாதிரி நடக்கவில்லை. வாழ்க்கையில், இனி ஏன் வாழ வேண்டும், மானம் தான் பெரிசு என்று நினைத்து, உயிரை மாய்த்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை.தற்கொலை எப்போதுமே ஒரு பிரச்னைக்கு தீர்வாக முடியாது. நீங்கள் தற்கொலை செய்த பின், அப்பெண்ணை உங்கள் மகன் மணம் முடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? சற்றே யோசித்துப் பார்க்கவும்.முத்தான மூன்று மகன்களைப் பெற்று, அன்பையும், பாசத்தையும், அறிவையும் ஊட்டி வளர்த்து, மாஸ்டர் டிகிரி வாங்கும் அளவிற்கு வளர்த்த ஒரு தாய், நிச்சயமாய் நடை முறைக்கு ஒத்து வருகிற முடிவைத் தான் எடுப்பார். நீங்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். சரியான முடிவை எடுக்க என் வாழ்த்துகள்.— இப்படிக்கு,சகுந்தலா கோபிநாத்.