தசரத முனிவர்!
அயோத்தியின் மன்னர், தசரதர் என்பது அறிந்த விஷயம். ராஜாவான அவர், முனிவர் போல மாறும் நிலை ஒரு காலத்தில் ஏற்பட்டது. முனிவரின் வடிவில் அவர், ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் காட்சியளிப்பது விசேஷம்.தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப் பேறு உண்டாக, குல குரு வசிஷ்டரிடம், ஆலோசனை கேட்டார். 'சிவனை வழிபட, அந்த பாக்கியம் கிடைக்கும்...' என்றார், வசிஷ்டர். அதன்படி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து, ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி வழிபட்டார், தசரதர். இதன்பின், ராமர், பரதன், லட்சுமணன் மற்றும் சத்ருக்கனன் என, நான்கு பிள்ளைகளை பெற்றார். தனக்கு குழந்தை பாக்கியம் தந்த சிவனுக்கு, 'புத்திர காமேட்டீஸ்வரர்' என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இங்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.புத்திர காமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று, விசேஷ பூஜை நடக்கும். அம்பாள் பெரிய நாயகிக்கு, கொடி மரத்துடன் கூடிய சன்னிதி உள்ளது.கோவிலுக்கு வெளியில், தசரதர் சன்னிதி இருக்கிறது. இவர், குழந்தை இல்லாத கவலையில், தாடி, மீசை வளர்த்து, முனிவர் போல் காட்சியளித்தார். அதே நிலையில், குழந்தை வரத்துக்காக, யாகம் நடத்தினார். இந்த அமைப்பில், தசரதருக்கு இங்கு சிலை வடிக்கப்பட்டுள்ளது. கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் வைத்திருக்கிறார்.குழந்தை வேண்டி, புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குவோர், ஏழு திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு தானமாக கொடுத்து, அதன் பின், சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில், இரண்டு குழந்தைகள், மூன்றாம் வாரத்தில், மூன்று என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று, ஆறு குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். ஏழாவது திங்களில், புத்திர காமேட்டீஸ்வரருக்கு, மிளகு வெண் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். ஆனி பவுர்ணமியன்று, கோவிலில் நடக்கும் புத்திர காமேஷ்டி யாகத்தில், கூட்டாக கலந்து கொள்ளலாம்; பிற நாட்களில் தனியாக யாகம் நடத்தலாம்; கட்டணம் உண்டு.கமண்டல நதிக்கரையில், விநாயகரும், எதிரே, ஆஞ்சநேயரும் உள்ளனர். ஒரு செயலை துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கி துவங்குகின்றனர். அது, சிறப்பாக முடிந்ததும், ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்கின்றனர். ஆஞ்சநேயர் கையில், சங்கு, சக்கரம் உள்ளது.திருவண்ணாமலையில் இருந்து, 58 கி.மீ., துாரத்திலும், வேலுாரில் இருந்து, 41 கி.மீ., துாரத்திலும், ஆரணி உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து, 2 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம்.தி. செல்லப்பா