கோடை வடாம் டிப்ஸ்
பாம்பே ரவை வடாம்!தேவையான பொருட்கள்:பாம்பே ரவை - 1 கிலோபச்சைமிளகாய் - 200 கிராம்உப்பு - 2 மேஜைக்கரண்டிபெருங்காயத்தூள் - 2 மேஜைக்கரண்டிதண்ணீர் - 8 லிட்டர்செய்முறை: ரவையை சலித்து, சுத்தப்படுத்தவும். பச்சை மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றாக மிக்சியில் போட்டு, விழுதாக அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, பச்சைமிளகாய் விழுது சேர்த்து, அவை கொதிக்கும் போது, ரவையை சிறிது சிறிதாக தூவி, கட்டி தட்டாமல் கிளறவும். கலவை நன்றாக வெந்ததும் இறக்கவும். சூடு இருக்கும் போதே கரண்டியில் எடுத்து, ஈரத்துணியின் மீது விருப்பமான அளவில் அப்பளம் போல ஊற்றி, வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்து, காற்று புகாத பாட்டிலில் அடைக்கவும்.காய்கறி வடாம்!தேவையான பொருட்கள்:துவரம் பருப்பு மற்றும் வெங்காயம் - தலா, 200 கிராம்கடலைப்பருப்பு - 100 கிராம்உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டிவெந்தயம் - கால் தேக்கரண்டிபெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டிதனியா - ஒரு தேக்கரண்டிஉப்பு - இரண்டு தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 12பெரிய உருளைக்கிழங்கு - 2காலிப்ளவர் சிறியது மற்றும் பெரிய காரட் - தலா 1கொத்துமல்லி தழை - 2 கட்டுசெய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிக்கவும். இதனுடன், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நைசாக அரைக்கவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம் போன்றவற்றை ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வறுத்து ஆற வைத்து பொடிக்கவும். கேரட், உருளைக்கிழங்கு தோலைச்சீவி, துருவிக் கொள்ளவும்.காலிப்ளவர்,வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கவும். அரைத்த பருப்பு கலவையுடன், நறுக்கியவற்றை சேர்த்து கலந்து, சிறு சிறு வடாம்களாக தட்டி, வெயிலில் நன்றாக உலர்த்தவும். காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளும், இந்த வடாமை விரும்பி சாப்பிடுவர்.வடுமாங்காய் ஊறிய சாற்றில், பச்சை மிளகாய், கொத்தவரைங்காய், பாகற்காய் போன்றவற்றை ஊற வைத்து, காய வைத்து, வற்றலான பின், எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால், வடுமாங்காய் புளிப்பு, மிளகாய் காரம் எல்லாம் சேர்ந்து, சுவையாக இருக்கும்.நான்கு பங்கு அரிசி, ஒரு பங்கு ஜவ்வரிசி கலந்து, ஒருமணி நேரம் ஊறிய பின், கழுவி, சாதத்தில் கொட்டி, கால் பங்கு தண்ணீர், உப்பு மற்றும் காரம் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைக்கவும். ஆறிய பின், புளித்த தயிர், சீரகம் அல்லது ஓமம் சேர்த்து கிள்ளி வைத்து, உலர வைக்கவும்; புது விதமான வற்றல் தயார். இந்த மாவையே சூடு இருக்கும் போது, கரண்டியால் நன்கு மசித்து, முள்ளு முறுக்கு அச்சிலும் போட்டு பிழிந்தெடுக்கலாம்.அரிசியும், ஜவ்வரிசியும் கலந்து, மிஷினில் அரைத்து, மாவில், உப்பு மற்றும் பெருங்காய பொடி கலந்து, 'தளதள'வென்று கொதிக்கும் நீரை சேர்த்து, சேவை மாவு போல பிசைந்து, இரண்டு கரண்டி நல்லெண்ணெய் விட்டு, மூடி வைக்கவும்.பின், புளித்த தயிர், பச்சை மிளகாய் விழுது மற்றும் சீரகம் கலந்து, கொழுக்கட்டை போல் பிடித்து, இட்லி தட்டில் வேக வைக்கவும். நன்கு வெந்ததும், முறுக்கு அச்சில் இட்டு வடாம் பிழியவும். இதற்கு, அதிக வெயில் தேவையில்லை; பேன் காற்றிலேயே உலர்ந்து விடும். உருண்டைகளை சூட்டோடு பிழிந்து விட வேண்டும்; ஆறிய பின் பிழிவது சிரமம்.