உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் இது மட்டுமே!

தெய்வங்களின் சக்தியை உள்ளடக்கி, தமிழகத்தில், சில கோவில்களில் ஸ்ரீசக்ரம் அமைத்துள்ளனர். மாங்காடு காமாட்சி, திருநெல்வேலி கடையம், நித்ய கல்யாணி அம்மன், சங்கரன்கோவில் கோமதியம்மன் உள்ளிட்ட, சில கோவில்களில் இவற்றை காணலாம். ஸ்ரீசக்ரம் உள்ள இடங்களில், மகாமேரு என்ற மலை போன்ற அமைப்பும் உருவாக்கப்படும். ஆனால், ஸ்ரீசக்ரத்திற்குரிய தேவதைகளுக்கென கோவில் இருக்கிறதா என்றால், இந்தியாவிலேயே ஒரே ஒரு இடத்தில் தான் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தென்னாங்கூர், பாண்டுரங்கன் கோவிலில், இந்த தேவதைகளை தரிசிக்கலாம்.மகாராஷ்டிராவிலுள்ள, பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவில் போல, தென்னாங்கூரில், பாண்டுரங்கன் - ரகுமாயி கோவில் கட்டப்பட்டது. ஞானானந்த சுவாமியின் சீடர், ஹரிதாஸ்கிரி சுவாமி, இதை அமைத்தார். கடவுளை பல வழிகளில் அடையலாம். அதில், எளிமையானது நாம சங்கீர்த்தனம். அதாவது, பாடுவதன் மூலம் இறைவனை அடைதல்.இங்கு, நாம சங்கீர்த்தனம் பிரதானம். இங்குள்ள கோபுரம், ஒடிசா மாநிலம், புரி ஜகன்னாதர் கோவில் போல, 120 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதன் மேல், 9.5 அடி உயரமுள்ள தங்க கலசம் உள்ளது. மகா மண்டபத்திலுள்ள, கோவிந்தராஜ பெருமாளுக்கு, சனிக்கிழமை தவிர, தினமும் திருக்கல்யாணம் நடத்தப்படும்.சாளக்கிராமம், அதாவது, நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கும் ஒரு வகை கல்லால் ஆனவர், பாண்டுரங்கன். உயரம், 12 அடி. இத்தலத்தின் விருட்சம், தமால மரம். இதன் கீழ் நின்று தான், புல்லாங்குழல் இசைப்பார், கிருஷ்ணர். வடமாநிலத்திலுள்ள இந்த மரம், இங்கு மட்டும் உள்ளது விசேஷம். யந்திரம் என்னும், ஸ்ரீசக்ரத்திற்கு ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், விநாயகர், பாலாம்பிகா... அன்னபூரணி, அச்வாரூடா, ராஜமாதங்கி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர், சக்கரத்தாழ்வார்...யோக நரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, பராசரஸ்வதி, மேதா தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், சண்டி மகாலட்சுமி, பிராஹ்மி, மாகேஸ்வரி, வாராகி, கவுமாரி, வைஷ்ணவி, சாமுண்டா மற்றும் மாகேந்திரி ஆகிய தேவதைகள் அதிபதிகளாக உள்ளனர். இவர்களின் அனைவர் பெயரையும் ஒன்றடக்கி, 'மகா சோடஷி' என்ற பெயரில், ஒரு தேவதை உருவாக்கப்பட்டிருக்கிறாள். மகா சோடஷி மண்டபத்தில், இவர்கள் அனைவரையும் தரிசிக்கலாம். நவராத்திரியை ஒட்டி இவர்களை தரிசித்து வாருங்கள். இவர்களைத் தரிசித்தால், எவ்வளவு கடினமான செயல்களும் நிறைவேறி விடும் என்பது ஐதீகம். காஞ்சிபுரத்தில் இருந்து, வந்தவாசி வழியாக, 35 கி.மீ., கடந்தால், தென்னாங்கூரை அடையலாம்.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !