ஹாஸ்டலில் தங்கி படித்த மருமகள்!
அண்மையில், என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கணவன் மனைவி, மகன், புது மருமகள் என்று, நான்கு உறுப்பினர்கள் தான். மகனுக்கு ஒரு ஆண்டுக்கு முன் தான் திருமணம் ஆகியிருந்தது. 'புது மருமகள் வீட்டில் இல்லையா?' என கேட்ட போது, என் நண்பரின் முகம் மாறியது. 'அதை ஏன் கேட்கறீங்க? புது மருமகள் பள்ளி படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முழுவதும், ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறாள்.'அவளின் பெற்றோரை விட்டு, நீண்ட ஆண்டுகள் பிரிந்தே இருந்ததால், எங்களோடு சகஜமாக பழகுவதில்லை. வேலை முடிந்ததும், தன் அறைக்கு சென்று விடுகிறாள். எங்களோடு சேர்ந்து, 'டிவி' கூட பார்ப்பதில்லை. அவர்களது அறையில் தனி, 'டிவி' உள்ளது. வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. 'அதிகமாக ஹாஸ்டலில் இருந்ததால், அவளுக்கு எதுவும் தெரியாது. நீங்க பக்குவமா சொல்லி அவளை திருத்துங்க...' என்று அவளது பெற்றோர் எங்களிடம் கூறி விட்டனர். அவள் வீட்டில் சமையல் செய்து பழக்கம் இல்லாததால், இங்கு வந்த பின், அவளால் தட்டுத்தடுமாற வேண்டியுள்ளது. உப்பு காரம், குறை உள்ளது என்று பக்குவமாக சொல்லிக் கொடுத்தால், நாங்கள் குறை கூறுகிறோம் என்று நினைக்கிறாள்.'மகனும் எங்களை புரிந்து கொள்ளாமல், நாங்கள் தான் அவளை குற்றம் கூறிக்கொண்டே இருக்கிறோம் என்று, எங்களிடம் கோபப்படுகிறான். அதனால், நாங்க ரெண்டு பேரும் அடுத்த வாரம் தனிக்குடித்தனம் போகப் போகிறோம்...' என்று கண்ணீர் மல்க கூறினார். ஹாஸ்டலில் தங்கி படித்த பெண்களின் பெற்றோரே... உங்கள் பெண்ணுக்கு, புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கலாமே!
— கே.ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை.கோவிலுக்கும் பெர்முடாஸா?
சமீபத்தில் நானும், என் தோழியும் கோவிலுக்குச் சென்றிருந்தோம். வழிபாடு முடிந்து, நவக்கிரகம் சுற்றும் போதுதான் கவனித்தேன்... எங்களுக்கு முன்னால் சுற்றிக்கொண்டிருந்த இளைஞர், மிகவும் குட்டையான, 'பெர்முடாஸ்' வகை உடை அணிந்திருந்ததை.பெண்களுக்கு நைட்டி எவ்வளவு சவுகரியமோ, அதுபோலதான், ஆண்களுக்கும் பெர்முடாஸ். அதற்காக கோவிலுக்கும், அவ்வுடையில் வந்தால் நன்றாகவா இருக்கிறது! பெண்கள் மற்றும் இளம் வயது பெண் குழந்தைகள் அதிகம் வந்து போகும் இடத்திற்கு, இவ்வாறு வரலாமா? இதே பெண்கள், அவசரத்துக்கு, காய்கறி, பால் வாங்க நைட்டியுடன் வெளியே வந்துவிட்டால், உடனே, இந்த ஆண்கள் அலட்டும் அலம்பல் இருக்கிறதே... அப்பப்பா... ஆண்கள் மட்டும் பெர்முடாஸ் அல்லது முக்கால் டிரவுசர் போட்டு வரலாமா?எந்த எந்த இடத்திற்கு, எந்த உடையில் செல்ல வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதிலும், நம் நாட்டை பொறுத்தவரை, ஆடை என்பது வசதிக்காகவோ, பேஷனுக்காகவோ அணியப்படுகிற விஷயமல்ல... அது ஒரு கலாசார குறியீடு! அணியும் ஆடையை வைத்தே, ஒருவரது குணாதிசயங்களை கூறிவிட முடியும்.இனிமேலாவது, கோவில் போன்ற புனிதமான இடங்களில் ஆண்களும் சரி, பெண்களும் சரி, அடுத்தவர்கள் முகம் சுளிக்கிற மாதிரி ஆடை அணிந்து வராமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
— எம். காந்திமதி கிருஷ்ணன், சென்னை.எங்கே செல்கிறது இந்த பாதை!
மகளிர் கல்லூரி பேருந்து நிறுத்தம் ஒன்றில், சற்று நேரம் நிற்க நேர்ந்தது. இரு மாணவியர் பேசிக் கொண்டிருந்தனர். ஆவலாக காதை நீட்டினேன். அதில் ஒருத்தி, 'ஏய்... சரவணன் வர்றான் டீ... அவன் யாரை பார்த்து அதிகம், 'ஜொள்' வடிக்கிறான்னு ஒரு பெட் வச்சுக்கலாமா?' என்று கூற, இன்னொருத்தி, உடனே, ஓ.கே., சொன்னாள்.அவர்கள் குறிப்பிட்ட பையன், இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான். அடுத்தடுத்து, அவர்கள் செய்த காரியம், என்னை மிகவும் அதிர்ச்சியடைய செய்தது. ஒருத்தி, தன் சேலை முந்தானையை, நெஞ்சு தெரிகிற மாதிரி சரிய விட்டாள். இன்னொருத்தி, 'பிரா' பட்டை வெளியே தெரியற மாதிரி எடுத்து விட்டாள். பையன் நெருங்கி வந்து, இருவரிடமும், வழிய வழிய பேசிக் கொண்டிருந்தான். இருவரும் அவனை உசுப்பேத்தி கொண்டிருந்தனர்.எங்கே செல்கிறது இந்த பாதை என்ற பொருமலோடு, எனக்கான பேருந்து வந்ததும் ஏறிச் சென்றேன்.
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.