மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க...
ஜூலை 23, உலக மன அழுத்தம் தணிப்பு தினம்* உலகில் பலருக்கு உடல்நல கோளாறுகள் வர காரணமாக இருப்பதில் முதலிடம் வகிக்கிறது, மன அழுத்தம். அன்றாட வாழ்வில், அவ்வப்போது ஏற்படும் மன அழுத்தத்தால் பிரச்னை இல்லை. ஆனால், அதுவே அதிகரிக்கும்போது, தலைவலி முதல் இதயநோய் வரைக்கும் வர காணமாகிறது.வேலை நேரத்தில் எழும் மன அழுத்தம், வாழ்நாள் ஆயுளை, 33 ஆண்டுகள் குறைத்து விடுவதாக, ஹார்வார்டு மற்றும் ஸ்டான் போர்டு பல்கலை கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.* அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தம், பதற்றம் போன்றவைகளை தவிர்க்க, எளிய வழிமுறைகள் உள்ளன. மன பதற்றங்களை தவிர்க்க, நேர நிர்வாகம் முக்கிய பங்காற்றுகிறது. எந்த வேலையாக இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி, முடிக்க பழகுங்கள். தினசரி, வார, மாத வேலை அட்டவணையை தயார் செய்து, அதன்படி வேலை பார்க்க முயலுங்கள் * வேலையின் இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை, சிறு இடைவெளி விடுங்கள். காரணம், '60 - 70 நிமிடங்கள் மட்டுமே, ஒரு வேலையை நம் மூளை தொடர்ந்து செய்யும். அதன்பின், சோர்ந்து விடும்...' என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்* வேலை நேரத்தில் ஏற்படும், 'டென்ஷன்' மூலம், படபடப்பு குறைய, ஒரு நிமிடம் வரை ஆகும். அந்த ஒரு நிமிடம் எதையும் செய்யாமல் மனதை நிதானமான நிலைக்கு கொண்டு வந்து, 5 நொடிகள் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடும், ஆழ் மூச்சு பயிற்சியை செய்யுங்கள். 'டென்ஷன்' குறையும், பின் வேலையை தொடருங்கள்* ஒரு நேரத்தில், ஒரு வேலை மட்டுமே பாருங்கள். பல வேலைகளை செய்து, 'ஹீரோ' ஆக வேண்டாம் * மன அழுத்தம் அதிகரிக்கும் நேரத்தில், மனதிற்கு பிடிக்கும் இசையை கேளுங்கள் * 'நம் மனதில் உள்ள நம்பிக்கையற்ற எண்ணங்களும், மன அழுத்தம் ஏற்பட காரணம். அதை அன்றாடம் செய்யும் உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்...' என்கின்றனர், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்* நீங்கள், காலை நேரத்தில் செய்யும், 20 - 30 நிமிட உடற்பயிற்சி, நாள் முழுக்க உங்களை உற்சாக மூடில் வைத்திருக்கும்; மன இறுக்கத்தை தளர்த்தும், மூளை தடுமாற்றம் ஏற்படாமல் உற்சாகமாக இயங்கி, மன அழுத்தத்தை தவிர்க்கும்* எப்போதும் பிரச்னையுடன் அலையாதீர்கள். அவைகளை நண்பர்கள் அல்லது உங்கள் மீது அக்கறை உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசி, பிரச்னைகளை சரி செய்ய பாருங்கள்* நம் மூளையில் சுரக்கும், 'செரடோனின்' அளவை பொறுத்தே, நம் மூடும் இருக்கும். தினசரி நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள், 'செரடோனின்' அளவை நிர்ணயிக்கின்றன. வைட்டமின், 'பி' உள்ள, சிறு தானிய உணவு மற்றும் பயிறு வகைகளில், இதை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. பாதாம், வால்நட் மற்றும் முந்திரி பருப்பு, பசலைக் கீரை, புரோக்கோலி, ஒமேகா - 3 உள்ள உணவு வகைகள், நரம்புகளையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைத்து, மன அழுத்தத்தை வராமல் தடுக்கும் * நிம்மதியான ஆழ்ந்த துாக்கம், மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கும். அன்றாட வாழ்வில் நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப, 7 - 8 மணி நேர துாக்கம் தேவை* 'ஒருநாளைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு, மட்டுமே மொபைல்போன், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களை பயன்படுத்துங்கள். காரணம், நீங்கள் எந்தளவுக்கு அவைகளை பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு அது உங்களின் துாக்கம், நினைவுத்திறன், செயல் திறன் போன்றவைகளை பாதித்து, மன அழுத்தத்தையும் அதிகரிக்கும்...' என்கின்றனர், அமெரிக்காவின் கனெக்டிக்கட் ஸ்கூல் ஆப் மெடிசன் ஆராய்ச்சியாளர்கள். கோவீ. ராஜேந்திரன்