உள்ளூர் செய்திகள்

ஊர் கூடித் தேர்... (7)

டாக்டர் கலாம், வாக்கு கொடுத்தபடி, 2008 நவம்பரில், ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தபோது, குவைத்தையும் சேர்த்திருந்தார். ஆனால், அன்றைய இந்திய அரசின் அனுமதி கிடைக்காததால், அது ரத்தாயிற்று. தொடர்ந்து, கலாமை நேரடியாகவும், அவரது அறிவியல் ஆலோசகர் -பொன்ராஜ் மூலமாகவும் நச்சரித்துக் கொண்டே இருந்தேன்.- இறுதியாக, டிசம்பர் 2015ல் தேதி கொடுத்தார். உடனே, படு குஷியாக விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டிருக்கும் போது, ஜூலை 27, 2015ல் அவரை களவாடிப் போய் விட்டான், காலன்.குவைத்தில், பல்லாயிரக்கணக்கில் இந்திய நர்ஸ்கள் சேவையாற்றி வருகின்றனர். இதில், வழக்கம்போல மலையாளிகளுக்கு அடுத்து, தமிழ் நர்ஸ்கள் இணைந்து ஒரு அமைப்பு வைத்துள்ளனர். குவைத்தில் மருத்துவம் சார்ந்த வசதி இல்லாமலும், முறையான சிகிச்சை வழி தெரியாமலும் அல்லாடும் தொழிலாளர்களுக்கு, இந்த அமைப்பு ஒரு கலங்கரை விளக்கு போன்றது. எதிர்பாராத துர் மரணங்களின்போது, உடலை தாயகம் கொண்டு செல்ல, அத்தனையையும் சட்டப்பூர்வமாக செய்து கொடுப்பர். அத்துடன், இந்தியாவிலும், விமான நிலையத்திலிருந்து சொந்த ஊர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் ஏற்பாடும் செய்கின்றனர். மேலும், அவர்களின் குடும்பங்களுக்கும், பிள்ளைகளின் படிப்புக்கும் உதவி செய்வர்.நிகழ்ச்சிகளுக்கு வரும் சினிமா நட்சத்திரங்களை கையாள்வது, அத்தனை எளிதானது அல்ல. சிலர், பந்தா; வேறு சிலர், எளிமையாய் பழகி, நம் கை கால்களை அன்பால் கட்டிப் போட்டு விடுவர். நாசர், இதில் இரண்டாம் ரகம். நடிகர் நாசரை குவைத்திற்கு அழைக்க, பல்முனை தாக்குதல் நடத்தி, படப்பிடிப்பு நெருக்கடியில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த அவரது வருகை, 2008ல் வசப்பட்டது.'பிரன்ட்லைனர்ஸ்' புத்தகத்தின், 12-ம் பாக வெளியீட்டிற்கு, சத்ருஹன் சின்ஹாவுடன் இவரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.நாசரின் காரியங்களை கவனிக்கும் மனைவி கமீலாவிடம், 'உங்களுக்கு ஏதாவது எதிர்பார்ப்பு உண்டா?' என்று கேட்டேன். 'விருந்தினராக தான் நாசர் வருவார். சேவைக்கான நிகழ்ச்சி என்பதால், எந்த பிரதிபலனும் தேவை இல்லை...' என்றார்.நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் முன், 'ஏற்பாடெல்லாம் எப்படி போகுது; உங்கள் தரப்பில் எந்த மாற்றமும் இல்லையே... இங்கிருந்து ஏதாவது கொண்டு வரணுமா...' என்றார், கமீலா.அப்புறம் குவைத்திற்கு வந்து இறங்கியதிலிருந்து, அவர்கள் தொடர் அசத்தல் தான்!நாசர், எளிமையானவர்; மகா இறுக்கம். எப்போதும் ஏதோ சிந்தனை வசப்பட்டிருப்பார். 'பர்சேஸ்' மற்றும் ஊர் சுற்றி பார்க்க எதிலும் அவர்களுக்கு விருப்பம் இல்லை.குவைத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கும், குவைத் டவரை கூட, தவிர்த்து விட்டார், நாசர். அவர்களை நம்பி திட்டமிட முடியவில்லை. 'நாங்க அடுத்த படம் குறித்து கலந்து பேசணும். எங்களை எங்காவது அமைதியான இடத்தில் விட்டுட்டு, அப்புறம் கூப்பிடும்போது வந்து அழைச்சுக்குங்க...' என்று, அவ்வப்போது இருவரும் சென்று விடுவர்.ஆனால், தமிழர்களுடன் கலந்துரையாடல் மற்றும் இந்திய துாதுவரின் விருந்து எல்லாவற்றிற்கும் பயங்கர ஒத்துழைப்பு கொடுத்தனர்.அரபியின் கடைகளில், நாசர் தம்பதியர் ஆதி காலத்து வெள்ளி ஆபரணம், பவளம், வாசனை பொருட்கள் போன்றவற்றை மட்டும் அலசி எடுத்தனர். அவற்றுக்கு நான் பணம் கொடுக்க முனைய, தேவையானதை வாங்கிக் கொள்ளும் சக்தி எங்களுக்குள்ளது. நாங்களே பணம் செலுத்தி விடுகிறோம்...' என்றனர்.வீடியோ கடை ஒன்றுக்கு நாசரை அழைத்துச் சென்று, 'சார், உங்க பட சிடி கலெக் ஷன் எது வேணும்னாலும் நீங்க எடுத்துக்கலாம். தருவர்...' என்றேன். 'அது என்ன எடுத்துக்கறது... காசு கொடுத்து வாங்கிக்கிறேன்...' என்றார். ஆனால், அங்கு குழுமியிருந்த கூட்டத்தையும், ஆரவாரத்தையும் கண்டதும், 'அப்செட்' ஆனார்.'சினிமாக்காரர்களுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் தருகிறீர்கள்... படம் பாருங்கள், ஆராதனையெல்லாம் எதற்கு... நாங்களும் மனுஷங்கதானே...' என்றார்.அதேபோல், அவர்கள் யாரிடமும் எந்த பரிசு பொருட்களும் பெற்றுக் கொள்ளவில்லை. நிகழ்ச்சியில், சத்ருஹனும் வெகு அன்யோன்யம். ஒரு கட்டத்தில், பார்வையாளர்கள் ஆடி, விசிலடித்து ஓவராய் அமர்க்களம் பண்ண, உள்ளூர் சட்டப் பிரச்னை எழவே, அவர்களை அமைதிப்படுத்தினார், நாசர்.ஏகப்பட்ட கூட்டத்துடனும், ஆரவாரத்துடனும் நடந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பை கொடுத்தார், நாசர். மறுநாள், 'குழந்தைகளை சினிமா பாட்டுக்கு ஆட வைத்து, பெற்றோர் ரசிப்பது சரியா... இது முறையா, சினிமா பாடல் இல்லாமல் கலைநிகழ்ச்சி தர முடியாதா...' என்று போட்டுத் தாக்கினார்.சினிமா நடனத்தில் விருப்பமில்லா விட்டாலும் கூட, பொது காரியம் என்று இறங்கின பின்பு சொந்த விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, பொது சேவைக்கு நிதி திரட்டும்போது, இந்த நிகழ்ச்சி மூலம் பெரிய தொகை, நல்ல காரியங்கள் பலவற்றிற்கும் வழங்க முடிந்திருக்கிறது.சிறந்த கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, வில்லனாக, வெட்டு குத்து, கொலை கதாப்பாத்திரங்களிலும் நடித்து, இயக்கி-, தயாரித்தும் உள்ளார். சினிமாவில் வாழ்ந்து வந்தாலும், நாசரின் ஆழ் மனதில் புதைந்து, புகைந்து கொண்டிருக்கும், சமூக சீர்திருத்த சிந்தனையும், நிந்தனையும் அவரை உயர்த்திப் பார்க்க வைக்கிறது.அது போகட்டும், நாசர் போன்ற பிரபலங்களை எங்கள் விழாவிற்கு அனுப்பி வைத்துள்ள லேனா தமிழ்வாணன், குவைத்திற்கு லேசில் வந்து விட்டாரா என்ன... — தொடரும்என்.சி.மோகன்தாஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !