உள்ளூர் செய்திகள்

 அந்துமணி பதில்கள்!

* அ.அஞ்சுகம், வள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம்: 'ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, அரசு வேலை வழங்கப்படும்...' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதால், பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காமல் திண்டாடும் நாங்களும், அடுத்த ஆண்டு முதல் மாடு பிடியில் கலந்து கொள்ளலாம் என யோசிக்கிறோம். எங்கள் யோசனை சரி தானே... உங்களைப் போன்றே, பலரும் இந்நேரம் யோசித்தக் துவங்கி இருப்பர். ஜல்லிக்கட்டில் இனி, முறையான பயிற்சி இல்லாமல், எத்தனை பேர் களமிறங்கி, உயிரைப் பணயம் வைக்கப் போகின்றனரோ தெரியவில்லை. அரசு பாடு திண்டாட்டம் தான்! எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம், வேலுார் மாவட்டம்: 'சட்டசபையில் இனி, கவர்னர் உரையே இருக்காது...' என்கிறாரே, தமிழக முதல்வர் ஸ்டாலின்? அன்று, கவர்னரே வேண்டாம் என்று கூறியவர்கள் இன்று, கவர்னர் உரை வேண்டாம் என்கின்றனர். இவர்கள், அன்று சொன்னதும், இன்று சொல்வதும் நடக்கவே நடக்காது என்பது, இவர்களுக்கே தெரியும். வெறும் வீம்புப் பேச்சு தான் இது! மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை, கவர்னர் தான் புட்டு புட்டு வைத்து விட்டாரே!ப.சோமசுந்தரம், சென்னை: சிகரெட் பாக்கெட்டின் விலை, 72 ரூபாய் உயர்ந்து விட்டதாமே...பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவே, சிகரெட்டுக்கான கலால் வரியை, மத்திய அரசு உயர்த்தி விட்டது. இதனால், சிகரெட்டின் விலையும் உயர்ந்து விட்டது. இனியாவது, 'வெண்குழல் வத்தி' புகைப்பதை, மக்கள் நிறுத்துகின்றனரா என்று பார்க்கலாம். நிறுத்தினால், பெரும்பாலான நோய்களிலிருந்து 'வெண்குழல் வத்தி' பிடிப்பவர்கள் தப்பிக்கலாம்! * ஜி.விஜயகுமார், கோவை: உடல் உறுப்பு தானம் வழங்குபவர் பெயர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தியாகச் சுவர் எழுப்பி அதில் பொறிக்கப்பட்டு, போற்றப்படுகிறதே... உன்னதமான திட்டம் இது. அதே போல், விளையாட்டுப் போட்டிகளில், சர்வதேச அளவில் சாதிக்கும் தமிழக வீரர்களின் பெயரை, அவர்கள் படித்த பள்ளியின் ஏதாவது ஒரு கட்டடப் பிரிவுக்கு சூட்டும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இது தான் உண்மையான ஜனநாயகம்! இதை விடுத்து, தெருவுக்கு தெரு, அரசியல் தலைவர்களின் சிலையை வைத்து, சிலைக்கு மாலை அணிவிப்பது முதல் அரசியல் செய்வது ஜனநாயகமே அல்ல!ராஜலட்சுமி, புதுடில்லி: கர்நாடகாவில், இந்நேரம் முதல்வராக ஆகியிருக்க வேண்டிய காங்., கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் சிவகுமார், டில்லியில் தலைவர் ராகுலை சந்திக்க முடியாமல் மூக்குடைப்பட்டார். இனி, கட்சி தாவுவாரா அல்லது காங்கிரசை உடைப்பாரா?கட்சியை உடைக்க, மஹாராஷ்டிராவின் சிவசேனா போன்று தைரியம் வேண்டும்; அது இவரிடம் இல்லை. ஆனால், கர்நாடகாவில், முதல்வர் சித்தராமைய்யாவை விட, சிவகுமாருக்கு தான் மவுசு அதிகம். சிறுபான்மையினர் ஓட்டுக்காக, சித்தராமைய்யாவை தாஜா செய்து, நாற்காலியில் அமர வைத்திருக்கிறது கட்சி மேலிடம்!எஸ்.தியாகராஜன், மகாபலிபுரம்: 'சாலையில் அழகான பெண்களை பார்த்தால், பாலியல் பலாத்காரம் நடக்கத்தானே செய்யும்...' என, ம.பி., காங்கிரஸ் எம்.எல்.ஏ., பூல்சிங் பரையா கூறியுள்ளாரே? காங்., கட்சியின் கையில் நாட்டைக் கொடுத்தால் என்னவாகும் என, இப்போது மக்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும். இக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர், இந்திரா உயிருடன் இருந்திருந்தால், இப்படி பேசியவரின் கதி என்னவாகி இருக்கும் என யோசியுங்கள், தியாகராஜன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !