ஞானானந்தம்: உயர்ந்த பக்திநெறி!
ஸ்ரீ கிருஷ்ண பகவானின் சிறந்த பக்தர், சூ ர்தாஸ். பார்வையற்ற அவர், ஒருமுறை திருத்தல யாத்திரை மேற்கொண்ட போது வழியில், ஒரு பாழும் கிணற்றில் தவறி விழுந்தார். 'இறைவா... நான் குருடன். இந்தக் கிணற்றிலிருந்து என்னால் வெளிவர முடியாது. உன்னால் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். எனக்கு உதவி செய்வாயாக...' என்று உருக்கமுடன் கடவுளை வேண்டினார். விஷ்ணு பகவான், ராதையுடன் தோன்றி, சூர்தாஸரை கிணற்றிலிருந்து வெளியேற்றினார். அவர்களின் உரையாடலிலிருந்து தன்னைக் காப்பாற்றியவர், ராதா கிருஷ்ணரென்று அறிந்தார், சூர்தாஸ். 'கிருஷ்ணா! என்னால் கேட்க முடிகிறது. ஆனால், உங்கள் திருக்கோலம் காணும் வாய்ப்பு எனக்கில்லை...' என்று முறையிட்டார். சூர்தாஸின் பக்தியை உலகிற்கு வெளிப்படுத்த நினைத்த கிருஷ்ணர், ராதையிடம், 'ராதா தேவியே, அவரை நெருங்காதே. அவர் உன் பாதங்களை இறுகப் பிடித்துக் கொள்வார்...' என்றார். அதன்படி ராதை, கிருஷ்ணர் நின்ற பக்கம் நடந்து வர, அவள் காலில் அணிந்திருந்த சலங்கையின் சத்தம் கேட்டு , 'நீங்கள் என் பின்னே தான் நின்றிருக்கிறீர்கள்...' என்று வேகமாகத் திரும்பி, தாயாரின் கால்களைப் பற்றினார், சூர்தாஸர். ராதை அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஆயினும், அவர் கால் சலங்கைகள், சூர்தாஸ் கைகளில் சிக்கின. 'தயவு செய்து சலங்கைகளைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவை, கிருஷ்ணருக்குப் பிடித்தமானவை...' என்று வேண்டினாள், ராதை. 'நான் பார்வையற்றவன். அவை உங்களுடையது என்று, நான் எப்படி அறிவேன்? என்னால் பார்க்க முடிந்தால் உண்மையை அறியலாம். ஆகையால் எனக்குப் பார்வை அளிக்கும்படி கிருஷ்ணரிடம் கூறுங்கள்...' என்று பதிலளித்தார், சூர்தாஸ். உடனே, சூர்தாஸ் கண்கள் பார்வையடைந்தது. அருகில் நின்ற, கிருஷ்ணர் மற்றும் ராதையை கண்ணாரக் கண்டு களித்தார். 'என்ன வரம் வேண்டும் கேள்...' என்று, சூர்தாஸரிடம் கேட்டார், கிருஷ்ணர். 'பரமனே! உங்கள் திவ்விய வடிவினைக் கண்ட இக்கண்கள் மற்ற எதனையும் காண விரும்பவில்லை. மீண்டும் என்னைக் குருடனாக்கி அருள் காட்டுங்கள்...' என்று வேண்டினார், சூர்தாஸ். சூர்தாஸரின் இந்த உயர்வான பக்திநெறியைக் கண்டு பகவான் மனமுருகி வாழ்த்தி அருளினார். உயர்ந்த பக்திநெறி என்பது இறைவனிடம் எல்லையற்ற அன்பும், பக்தியும் கொண்டு அவனை அடைவது தான். இத்தகைய பக்திநெறியைப் பின்பற்றுவதன் மூலம், ஒருவன் தன் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அறிந்து, அதை அடைய முடியும். அருண் ராமதாசன்