சுற்றுலா ஸ்பெஷல்: பொருட்கள் வாங்கும் போது...
சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானோர், அந்தந்த ஊர்களுக்கு செல்லும்போது, அங்கு பிரபலமாக இருக்கும் பொருட்களை வாங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பர். அப்படி வாங்கி வந்த பொருட்கள் அனைத்தும் உபயோகமானவையா, பயன்தரக் கூடியவையா என்பது கேள்விக்குரியதே...உதாரணத்துக்கு, மகாபலிபுரம், கன்னியாகுமரிக்கு செல்வோர், விற்பனைக் கூடங்களில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் சங்குகளில், தங்கள் பெயர்களைப் பொறித்து வாங்கி வருவர். அந்த சங்கு, எத்தனை பேர் வீடுகளில், சரியான இடத்தில் பாதுகாப்பாக இருக்கும்?அடுத்து, கீ-செயின்... பைக்குக்கு ஒன்று, பீரோவுக்கு ஒன்று, எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று, எதிர் வீட்டுக்கு ஒன்று, பக்கத்து வீட்டுக்கு ஒன்று என, கணக்குப் போட்டு வாங்கி வருவர். இப்படி வாங்கி வந்த கீ-செயின்கள், டஜன் கணக்கைத் தாண்டும்.ஆசையாக வாங்கி வரும் நினைவுச் சின்னங்களில் சில சிரமங்களும் உண்டு. தாஜ்மகாலுக்கு செல்பவர்கள், அங்கு வரிசை கட்டி நிற்கும் மினியேச்சர் தாஜ்மகாலை வாங்குவர். அவை மரப்பெட்டியில் பக்காவாக, 'பேக்' செய்து தரப்படும். வீட்டில் வந்து பிரிக்கும்போது, நான்கு துாண்களில் ஒன்று துண்டாகி இருக்கும். அதை ஒட்டவும் முடியாது. ஒட்ட நினைத்தால் உடைந்த துாண் வேறு திசையைப் பார்க்கும். அடுத்த சில தினங்களில் அந்த நினைவுச்சின்னம் உடைந்து போகும்.சிலர், பிரபலமான ஊர்களுக்குப் பயணப்படும் போது, அந்த ஊரின் பெயரை தாங்கி நிற்கும் பொருட்களை வாங்குவர். 'ஜெய்ப்பூர் ரஜாய்' என்பர். ஒரே ஒரு மாதம் மட்டும் குளிராக இருக்கும் சென்னை போன்ற நகரங்களில் வசிப்போர், டஜன் கணக்கில் இதை வாங்குவர். அதை ஒருமுறை பயன்படுத்தி விட்டு, துவைத்துக் காய வைத்து எடுத்து, அடுத்த முறை பயன்படுத்தினால் காலுக்கும் எட்டாது, தலைக்கும் எட்டாது.சுண்டக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என, பெரியளவில் வாங்கி வரப்படும் அரிய பொக்கிஷமாக நினைக்கும் பொருளை வைக்க, வீட்டில் இடமிருக்காது. அப்படியே இருந்தாலும், அதைப் பராமரிக்க நேரமிருக்காது. ஒட்டடை படிந்து ஒருகட்டத்தில் குப்பைக் கிடங்குக்கு இடம் மாறும்.ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏலகிரி போன்ற சுற்றுலா தலங்களில் ஆசையாக வாங்கும் ரோஜா செடிகள், எத்தனை பேர் வீட்டில் பூத்திருக்கும்?இவற்றில் உணவுப் பொருட்களுக்கும் இடமுண்டு. ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பயணப்படுபவர்களின் கண்களை மட்டுமல்ல, ருசியையும் ஈர்க்கும் பொருள், ஜீராவில் ஊறி மிதக்கும்,- பாலில் செய்யப்பட்ட ரசகுல்லா வகையான இனிப்புகள். கடைகளில் வாங்கி வாயில் வைத்ததும், இதற்காகவே இந்த ஊருக்கு வர வேண்டும் என, நினைக்க வைக்கும். அதை பார்சல் செய்து, சொந்த ஊருக்கு எடுத்து வந்து சுவைத்தால் புளிக்கும். பிரசாதமாகத் தரப்படும் பொருட்களும், சில வீடுகளின் பிரிஜ்ஜில் பல மாதங்களாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். செல்லுமிடங்களில் எல்லாம் இப்படி தேவையற்ற பொருட்களை, யோசிக்காமல் விலைக் கொடுத்து வாங்கி, வீட்டை குப்பை குடோனாக்க வேண்டுமா... டூர் சொல்பவர்கள் ஒரு முறைக்கு பலமுறை யோசிக்கலாம்.