நம்மிடமே இருக்கு மருந்து - கொய்யாபழம்!
உலகிலுள்ள பழங்களில் மிகச்சிறந்ததாக, ஹைதராபத்தில் நடந்த ஆய்வில் முதலிடத்தை தட்டிச்சென்றது, கொய்யாப்பழம். மிகச்சிறந்த புரோ ஆக்டீவ், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அதிக கலோரி உள்ளது என, முதலிடத்தை பிடித்தது. கொய்யாப்பழத்தில், புரோட்டீன்கள், நல்ல கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் அதிகளவு உள்ளன. இதோடு கரோட்னாய்டுகள், பாலிபினால்கள், ஆன்டி ஆக்சிடென்ட்களும் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், பல்வேறு இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. கூடுதலாக, உடலில் சோடியம் மற்றும் பொட்டாஷியத்தை சம நிலையில் பராமரிக்க உதவுகிறது. உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், அது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய வழிவகை செய்யும். எனவே, இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இதய நோய் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்கின்றனர், அமெரிக்காவின் வேளாண் துறை ஆராய்ச்சியாளர்கள். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் மதிய உணவுக்கு முன் கொய்யாப்பழமோ, சாறாகவோ பருக பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளதால், கண் தொடர்பான பிரச்னைகளை சரி செய்கிறது. ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட, நான்கு மடங்கு, கொய்யாவில் வைட்டமின் சி உள்ளது. இது மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது. மேலும், ரத்த நாள சுவர்களின் உட்புற ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. கொய்யாப்பழத்தில் கரோட்டின், லைகோபைன் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகமாக உள்ளன. இச்சத்துக்கள் அனைத்துமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவைகளாகும். முகப்பரு வருவது குறைவதோடு சருமத்தின் அழகும், ஆரோக்கியமும் மேம்படும். மன அழுத்தத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா? அப்படியானால் கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். அதில் உள்ள மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நரம்புகள் மற்றும் தசைகளை, 'ரிலாக்ஸ்' செய்து மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது. உடல் பலவீனம், தோல் பிரச்னை, மலச்சிக்கல் போன்றவற்றை போக்கும் ஆற்றல் உடையது, சிகப்பு கொய்யாப்பழம் மற்றும் கொய்யாக்காய்.தினமும் சிகப்பு கொய்யாப்பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பால் சேர்த்து, ஒரு டம்ளர் காலையில் சாப்பிட்டு வர, போதைப் பழக்கத்தில் உள்ளோர் மீண்டு வருவர். இதன் தோலில் அதிகப்படியான புருக்டோஸ் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது. கொய்யாப்பழத்தை காலை, 11:00 மணி மற்றும் மதியம், 3:00 மணிக்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.