சந்திரவள்ளியால் பகிரப்படுவது அன்னமல்ல, அன்பு!
சென்னை, ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ளது, 'ஸ்ரீ அன்ன போஜனம் மெஸ்!' அந்த சிறிய மாடி ஹோட்டலின் குறுகிய படிக்கட்டுகள் வழியாக, ஏழை, எளியவர்கள் பலர், தத்தம் குழந்தைகளுடன் ஏறி, சாப்பாட்டு மேஜையில் இடம் பிடித்தனர்.அவர்களுக்கு, தலை வாழை இலையில் அப்பளம், வடை, பாயசம், துவையல் மற்றும் பல வித பொரியலுடன் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டவர்கள் வயிறும், மனதும் நிறைய, 'நல்லா இரு தாயி...' என்று சொல்லி, கீழே இறங்கினர்.அடுத்த குரூப் மேலே ஏறத் துவங்கியது.அவர்களது பந்திக்கு உணவு வருவதற்கு முன், இலவச உணவு வரும் கதையை சொல்லி விடுவது நலம்.பழம்பெரும் சுதந்திரப் போராட்ட தியாகி, ராமசாமி, வயது 98. தற்போதும் திடமாக இருக்கிறார். இவரது மகள் சவுந்திரவள்ளி. மற்றவர்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக, பசிப் பிணி போக்க வேண்டும் என, சொல்லி வளர்க்கப்பட்டவர்; அப்படியே வளர்ந்தார்.பின்னாளில், குடும்பத் தலைவியான பிறகும், கணவர் உதவியுடன், தன் அன்னதான தர்மத்தை முடிந்த வரை விடாமல் தொடர்கிறார்.'கொரோனா' சமயம், 'நீங்கள் நன்றாக சமைப்பீர்களாமே...' என்று, நடிகர் தனுஷ் நிறுவனத்திலிருந்து, தினமும், 50 பேருக்கு சாப்பாடு தயார் செய்யச் சொல்லி,'ஆர்டர்' வந்தது. அப்போது, மறுக்காமல் ஏற்று, அதையே தன் தொழிலாகவும் மாற்றிக் கொண்டார்.வீட்டிலிருந்து உணவு சமைத்து கொடுத்தபடியே, தன் தொழிலை விரிவு செய்யும் வகையில் தற்போதுள்ள இடத்தில், 'மெஸ்' நடத்தி வருகிறார்.வயதான தந்தையின் உடலுக்கு, மனதிற்கு, எப்படிப்பட்ட உணவு உகந்ததாக இருக்குமோ, அந்த மாதிரி சைவ உணவையே சமைத்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார்.செயற்கை நிறமூட்டி இல்லாமல், சிறு தானிய உணவுகளின் துணையோடு, விதம் விதமான துவையலோடு இவர் தரும் அருமையான, ஆரோக்கியமான மதிய உணவிற்கு நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு.மெஸ்சின் மூலம் வரும் வருமானத்தில் ஒரு பங்கை, எளியவர்களுக்கு செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, மாதத்தில் ஒரு நாள், ஏழை, எளியவர்களை வரவழைத்து, தலை வாழை இலை போட்டு, இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.அன்று, வழக்கமான மெஸ் சாப்பாட்டுடன், சிறு தானிய இனிப்பு, பாசிப் பருப்பு பாயசம் என, கூடுதல் வகைகளும் உண்டு.இலவசமாக சாப்பிட வந்தவர்கள் தானே என்று நினைக்காமல், விருந்தினர்களாக பாவித்து, என்ன வேண்டும் என, திரும்ப திரும்ப கேட்டு, சவுந்திரவள்ளி பரிமாறும் அழகே தனி. அவர்களுக்கு, அவர், அன்னத்தை மட்டும் பகிரவில்லை, தன் அன்பையும் சேர்த்து முழுமையாகப் பரிமாறுகிறார்.கணவர் முத்துக்குமார், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், மனைவியின் தொண்டுள்ளத்தோடு கூடிய சேவைக்கு முழுமையான ஆதரவு கொடுத்து, துணை நிற்கிறார்.'மாதம் ஒருமுறை நடத்தப்படும் இந்த சேவையை, வாரம் ஒரு முறை நடத்த வேண்டும். சிறிய அளவில் கோவில் கட்டி, அதில் தினமும், அன்னதானம் செய்ய வேண்டும் என்பதே என் கனவு...' என்று கூறும், சவுந்திரவள்ளியின் கனவு நனவாகட்டும்.அவரது தொடர்பு எண்: 7092055515.- எல். எம். ராஜ்