உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: யாரையும் குறைசொல்லாதீர்கள்!

மே 30 வைகாசி விசாகம்இந்த உலகில், யாராவது ஒரு மனிதரை, 'இவரிடம் குறையே பார்க்க முடியாது...' என்று அடையாளம் காட்ட முடியுமா? இப்படி யாராவது கேட்டால், 'முடியாது...' என்று தான் சொல்ல முடியும். காரணம், எல்லாரிடமும் ஏதாவது ஒரு குறை இருக்கும். எனவே, யாரும் யாரையும் குறை சொல்லக்கூடாது. இதைத்தான், வைகாசி விசாகத்தில் அவதரித்த, முருகப்பெருமான், தன் மயில் வாகனம் மூலம் உணர்த்துகிறார். அவர் அவதாரம் செய்ய, ஏன் விசாக நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்தார் தெரியுமா? 'வி' என்றால், மேலான, 'சாகம்' என்றால், பறவை என்று அர்த்தம். பறவைகளில் மேலானது, மயில். இந்த மயில் தான் அவரது வாகனம். தேவர்களின் தலைவனான இந்திரன், தன் வாகனமான மயிலை, முருகனுக்கு பரிசளித்தான். இது, தேவமயில். பத்மாசுரனை சம்ஹாரம் செய்தபோது, அவனை இருகூறாகப் பிரித்து, ஒரு பகுதியை மயிலாக மாற்றினார், முருகன். இது, அசுர மயில். முருகனுக்கு இடது கை பக்கமாக திரும்பி இருந்தால், அது, தேவமயில் அல்லது இந்திர மயில். வலது கை பக்கமாக இருந்தால், அசுரமயில். அபூர்வமாக சில இடங்களில், மயில் நேராக பக்தர்களை பார்த்தபடி நிற்கும். இதை, நேர்நோக்கு மயில் என்பர். மயிலுக்கு, சித்ரபர்ஹி என்ற பெயரும் உண்டு. இதற்கு அழகான தோகை கொண்ட பறவை என, பொருள். விசாகம் என்றாலும், மயில் தான். இதனால் தான், முருகனுக்கு, விசாகன் என்ற பெயரும் உண்டு. பெண்களுக்கு, விசாகா என, பெயர் சூட்டுவது, மயில் போன்ற அழகுள்ளவள் என்ற பொருளில் தான். மயில் தோகையை விரித்தால் அது, 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை ஒத்திருக்கும். பிரணவம் என்றால், என்றும் புதியது என, பொருள். முருகப்பெருமானும் என்றும் இளமையானவர் என்ற பொருளை அதன் தோகை உணர்த்துகிறது. மயில் பார்க்க அழகு; ஆனால், அதன் குரல் ரசிக்கத்தக்கதாக இருக்காது. குயில் பார்க்க கருப்பு; ஆனால், குரல் இனிமையானது. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஏதோ ஒரு குறையுள்ளது. இதன் மூலம் யாரையும் குறை சொல்லக்கூடாது என உணர்த்துகிறார், முருகப்பெருமான். தமிழ்க்கடவுள் என போற்றப்படுகிறார், முருகன். அவரை 'முருகு' என்பர். இதில், 'மு' என்ற மெல்லினம், 'ரு' என்ற இடையினம், 'கு' என்ற வல்லின எழுத்து இணைந்து வருகிறது. அவர், பக்தர்களிடம் மென்மையாக நடந்து கொள்பவர் என்பதால் தான் மெல்லின எழுத்துடன் அவரது பெயர் துவங்குகிறது. அவரது பக்தர்களுக்கு யாரேனும் துன்பம் இழைத்தால், இடையின எழுத்தின் உச்சரிப்பில் சற்று கடுமை காட்டுவதைப் போல எச்சரிக்கை தருவார். அதற்கும் மசியவில்லை என்றால், வல்லின எழுத்தின் கடுமையான உச்சரிப்பைப் போல, மிகக் கண்டிப்பாக நடந்து கொள்வார். முருகப்பெருமானின் பிறந்தநாளில் அவரது இந்த சிறப்புகளை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி தானே! - தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !