| ADDED : செப் 19, 2026 11:31 PM
பெங்களூரு: கன் னட அரிச்சுவடி எழுத்துகளை எழுத தெரியாத, அரசு பள்ளி மாணவர்களை பார்த்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் அதிர்ச்சி அடைந்தார். இவரது உத்தரவுபடி, 180 ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது . சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், கடந்த சில நாட்களுக்கு முன், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பல்வேறு அரசு பள்ளிகளுக்கும் சென்றிருந்தார். அப்போது, மாணவர்களுடன் உரையாடும் போது, அவர்களுக்கு குறைந்தபட்சம் கன்னட அரிச்சுவடி எழுத்துகளை கூட எழுத தெரியவில்லை என்பது தெரிந்தது. கணிதமும் வரவில்லை. கல்வியில் மாணவர்கள் பின் தங்கியிருப்பதை பார்த்து, எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் அதிர்ச்சி அடைந்தார். ஆசிரியர்களின் செயல்பாடின்மையால் கோபம் அடைந்தார். அந்த ஒன்றும் தெரியாத மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பும்படி, கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதன்படி, 180 ஆசிரியர்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனும் ஆய்வு செய்யப்படுகிறது.