உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் உரையின் போது இடையூறு கண்டித்து லோக்சபாவில் தீர்மானம்

பிரதமர் உரையின் போது இடையூறு கண்டித்து லோக்சபாவில் தீர்மானம்

புதுடில்லி, பிரதமர் நரேந்திர மோடியின் உரையின் போது, எதிர்க்கட்சிகள் இடையூறு செய்ததைக் கண்டித்து லோக்சபாவில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று லோக்சபாவில் பேசினார். பிரதமர் பேச எழுந்த போது, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த எம்.பி., ஒருவரை பேச அனுமதிக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லாவை எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். அவர்களில் ஒருவருக்கு பேச ஏற்கனவே வாய்ப்பளிக்கப்பட்டதாக சபாநாயகர் கூறினார். அப்போது காங்., - எம்.பி., கவுரவ் கோகோய், மணிப்பூர் எம்.பி.,க்கள் இருவருடன் இணைந்து சபையின் மையப் பகுதியை நோக்கி விரைந்தார். வேறு சில காங்., - எம்.பி.,க்கள், அவர்களுடன் சேர்ந்து மையப் பகுதியை நோக்கி சென்றனர். அவர்களுக்கு ஆதரவாக திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்களும் விரைந்தனர். இதற்கிடையே, பிரதமர் மோடி பேசினார். அப்போது, அவரை பேச விடாமல் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து இடையூறு செய்தனர். மோடி பேசி முடித்தபின் பேசிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ''பிரதமர் மோடியின் பேச்சின் போது எதிர்க்கட்சியினர் இடையூறு செய்தது பார்லிமென்ட் விதிகளை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. அவர்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என்றார். எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளை கண்டித்த சபாநாயகர் ஓம் பிர்லா, தீர்மானத்தை முன்மொழிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதை ஆதரித்தார். இதையடுத்து, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக எதிர்க்கட்சியினரை கண்டித்து லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை