| ADDED : நவ 20, 2025 09:31 AM
பரிதாபாத்: டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஹரியானாவில் உள்ள முக்கிய உரக்கடைகளில் கடந்த 3 ஆண்டு கால விற்பனை குறித்த விபரங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டில்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் உமர் நபி என்ற பயங்கரவாதி நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் உள்பட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடைய உமர் நபிக்கு நெருக்கமானவர்களை என்ஐஏ தொடர்ந்து கைது செய்து வருகிறது.மேலும்,பரிதாபாத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 2,900 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இவ்வளவு வெடிமருந்துகளை பயங்கரவாதிகள் திரட்டியது எப்படி? என்பது குறித்த விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர். பரிதாபாத்தில் உள்ள சோஹ்னா, நுஹ், பரிதாபாத் மற்றும் பால்வால் பகுதிகளில் உள்ள 7 முக்கிய உரக் கடைகளின் மூன்று ஆண்டுகால விற்பனை விபரங்களை போலீசார் பெற்றுள்ளனர். எந்த ஒரு தனிநபராவது அதிகளவிலான உரங்களை கொள்முதல் செய்துள்ளனாரா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். உரமாக பயன்படுத்தப்படும் வேதி உப்புக்களை வெடிமருந்து தயாரிக்கவும் பயன்படுத்த முடியும் என்பதால் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.முன்னதாக, இந்த உரக்கடைகளின் உரிமையாளர்களை கடந்த நவ.,12 முதல் 15ம் தேதி வரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால், சந்தேகத்திற்கிடமாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல, ஹரியானா வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பில் நான்கு மாவட்டங்களில் உள்ள 1,300க்கும் மேற்பட்ட அனுமதிபெற்ற உர விற்பனை கடைகளில் இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.