| ADDED : நவ 28, 2025 06:34 AM
டில்லி காற்று மாசு தொடர்பான வழக்குகளை, வரும், டிச., 1ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் விரைவாக உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபரஜித்தா சிங் வலியுறுத்தினார். அதற்கு அமர்வு கூறியுள்ளதாவது: எந்த மாதிரியான உத்தரவுகளைப் பிறப்பித்தால் உடனடியாக காற்று மாசு நீங்கும் என்று நீங்கள் கூறுங்கள்; அதை உடனடியாக நாம் உத்தரவாக பிறப்பிக்கலாம். இது ஒரு சிறிய பிரச்னை கிடையாது; மாறாக ஒட்டுமொத்தமாக காற்று மாசுக்கு என்ன காரணம் என்பதை நாம் கண்டறிய வேண்டும். இந்த விவகாரத்தில் நிபுணர்கள் கருத்தை நாம் கேட்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, டிச., 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. -- டில்லி சிறப்பு நிருபர் -