| ADDED : ஜூன் 14, 2024 06:43 AM
திருப்பூர் : 'இல்லம் தேடி கல்வி' திட்ட வகுப்புகளை இந்தக் கல்வியாண்டில் துவங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.கொரோனா கால கட்டத்தில் மாணவர் கல்வித்தரம் மேம்படுத்தவும், கற்றல் இடைவெளியை குறைக்கவும், 'இல்லம் தேடி கல்வி' திட்டம், 2021ல் துவங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம், கணிதம் கற்றுத்தருவதுடன், ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் என களை கட்டியதால், பெற்றோர், குழந்தை மத்தியில் இம்மையங்கள் வரவேற்பை பெற்றன.ஒவ்வொரு மாவட்டத்திலும், 8 ஆயிரம் முதல், 11 ஆயிரம் பேர் வரை மாநிலம் முழுதும், 2.10 லட்சம் தன்னார்வலர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து வகுப்புகளை நடத்தி வந்தனர். இந்தக் கல்வியாண்டு துவங்கி ஒரு வாரம் நிறைவு பெற உள்ள நிலையில், 'இல்லம் தேடி கல்வி' திட்ட வகுப்புகளை துவங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:கொரோனா கால கட்டம் முடிந்து விட்டது; தன்னார்வலர்களில் சிலர் ஆக்கபூர்வமாக பணியாற்றினாலும், ஒரு சிலர் வகுப்புகள் நடத்தாமல், ஏற்கனவே எடுத்து வைத்த போட்டோக்களையே பதிவேற்றம் செய்கின்றனர். இதுவரை திறம்பட பணியாற்றியவர்கள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் மாற்றுப்பணி வழங்கப்பட உள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து, அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தல் வந்தால், அது குறித்து தெரிவிக்கப்படும். தற்போதைக்கு மையங்களை திறக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.