சென்னை: பிரதமர் மோடி, ஜெயலலிதா வெற்றி 'சென்டிமென்ட்' காரணமாக, திருச்சியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த, விஜய் முடிவெடுத்து உள்ளார்.நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கும் அறிவிப்பை, பிப்., மாதம் வெளியிட்டார். கட்சிக்கு ஒரு கோடி உறுப்பினர் சேர்ப்பதற்கான பணிகள், 'ஆன்லைன்' வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தில், கட்சியைப் பதிவு செய்துள்ளனர். கட்சி கொள்கைகள், கொடி உள்ளிட்ட விபரங்கள், மாநாடு நடத்தி அறிவிக்கப்படும் என, விஜய் தெரிவித்திருந்தார். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, இரண்டு படங்களில் நடித்து முடிக்கவும், அவர் திட்டமிட்டு உள்ளார். அதன்படி, கோட் திரைப்படம், செப்., மாதம் வெளியாகவுள்ளது. அடுத்த படத்திற்கான வேலைகளிலும், விஜய் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், அவருடைய கட்சி மாநாடு ஏற்பாடுகளும் துவங்கியுள்ளன. முதலில் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது அதை மாற்றி, திருச்சியில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில், பிரதமர் மோடி, ஜெயலலிதா ஆகியோரின் வெற்றி 'சென்டிமென்ட்' இருப்பதாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறுகின்றனர்.அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் மற்றும் சரத்குமார் ஆகியோர், கட்சி துவங்கி முதல் மாநாடை மதுரையில் நடத்தினர். இவர்களின் கட்சி தமிழக அரசியலில் பெரிதாக சோபிக்கவில்லை. காங்., கட்சியில் இருந்து விலகி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மதுரையில் துவங்கிய காங்., ஜனநாயகப் பேரவையும் போணியாகவில்லை. மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார்.இந்த சென்டிமென்ட் குறித்து நடிகர் விஜயிடம் கட்சியினர் சிலர் எடுத்துக் கூற, மாநாடு நடத்த மதுரை மாநகர் வேண்டாம் என சொல்லி விட்டார். திருச்சியில் 2014ம் ஆண்டு, பிரதமர் வேட்பாளராக மோடியை முதன்முதலில் அறிமுகம் செய்யும் மாநாடு நடந்தது. மூன்றாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று பிரதமராக மோடி உள்ளார்.தி.மு.க., அரசை எதிர்த்து, 2010ல் திருச்சியில், மறைந்த ஜெயலலிதா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினர். இதில் கிடைத்த எழுச்சியால், 2011 மற்றும் 2016 சட்டசபை தேர்தல்களில் தொடர் வெற்றிகளை, அ.தி.மு.க., பெற்றது. அந்த சென்டிமென்ட் காரணமாக, தன்னுடைய கட்சிக்கான முதல் மாநாடை திருச்சியில் நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, திருச்சி ஜி - கார்னரில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பிரம்மாண்ட மைதானத்தில் மாநாடு நடத்த பேச்சு நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.