| ADDED : ஜூன் 13, 2024 08:26 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் கோடை விடுமுறை முடித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்களை இனிப்பு, பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 6 தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரியில் கடுமையான வெயில் காரணமாக கோடை விடுமுறை ஜூன் 11 வரை நீடிக்கப்பட்டது.இதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகள் அனைத்து பூக்கள், பலுான்களால் அலங்கரித்து விழாக்கோலம் பூண்டியிருந்தது. விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். அடம் பிடித்த குழந்தைகள்
கோடை விடுமுறை பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட சூழ்நிலையில் முன்மழலை மற்றும் துவக்க பள்ளி வாசல்களில் பள்ளிக்கு செல்ல மனம் இல்லாமல் பிஞ்சுகள் அழுது அடம் பிடித்த காட்சிகளும் ஆங்காங்கே அரங்கேறியது. அவர்களை பெற்றோர் ஒருவழியாக சமாதானம் செய்து, இனிப்பு வாங்கி கொடுத்து பள்ளிக்கு அனுப்பினர். இலவச பாடபுத்தகம்
பள்ளி திறப்பினை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான இலவச சீருடை, புத்தகம் உள்ளிட்டவைகள் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.கள், பள்ளி துணை முதல்வர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டன.