புதுச்சேரி : ராமநவமி திருவிழாவை முன்னிட்டு முத்தியால் பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சிறப்பு சொற்பொழிவு நடந்து வந்தது. இறுதி நாளான நேற்று ஓய்வு மாவட்ட நீதிபதி ராமபத்திரன் ஆற்றிய சொற்பொழிவு: விஸ்வாமித்திர முனிவர், பசி, தாகம், துாக்கம், போன்றவற்றால் பாதிக்கப்படாமலிருக்க ராமனுக்கு பலா, அதிபலா என்ற மந்திரங்களை உபதேசித்தார். தாடகை வனம் சென்று தாடகை பற்றிய வரலாற்றை தசரத குமாரர்களுக்கு சொன்னார்.வனத்தில் தாடகை, முனிவர்களையும், வன விலங்குகளையும் துன்புறுத்துகிறாள். ரகு நந்தனா, அனைவரையும் துன்புறுத்தி, யாகத்தை அழிக்க வருபவளை கொன்று விடுவதே உலகத்திற்கு நன்மை எனக் கூறி, இவளை அழிக்கும் வல்லமை உனக்கு மட்டுமே உள்ளது என்றார். முதல் கன்னிப் போரில் ஒர் பெண்ணைக் கொல்வதா என, ராமன் தயங்குவதைக் கண்ட விஸ்வாமித்திரர், பலவித தர்மங்களை எடுத்துக் கூறி, தாடகையை வதைக்கச் சொன்னார். ராமனும் முனியை வணங்கி, தந்தையின் கட்டளைப்படி தாடகையை கொன்றான்.விஸ்வாமித்ரர் ராமனிடம், எந்த அஸ்திரங்களால், தேவ கந்தர்வ கணங்களோ, உரக (நாக) கூட்டமோ, எதிர்த்தாலும், யுத்தத்தில் எதிரிகளை அடக்கி, வதம் செய்து வெற்றி பெறுவாயோ, அத்தகைய திவ்யமான அஸ்திரங்களை உனக்கு முழுவதுமாக தருகிறேன் என, அனைத்து அஸ்திரங்களையும் ராமனுக்கு மந்திர வடிவில் கொடுத்தார். ராமனும் மகிழ்ச்சியடைந்து, அவைகளை ஏற்றுக் கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.