| ADDED : ஆக 11, 2024 05:26 AM
காரைக்கால் : காரைக்காலில் அதிவேகமாக சென்ற 20 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஏராளமான படித்து வருகின்றனர். பெற்றோர்கள் சிலர் ஆபத்தை உணராமல் தங்கள் பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த பைக்குகளை வாங்கி தருகின்றனர். மாணவர்கள் பலர் நண்பர்கள் முன்னிலையில் தங்கள் கெத்தை காட்டுவதற்கு பைக்குகளில் பள்ளிகளுக்கு வருகின்றனர். சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் வருவோரை கவனத்தில் கொள்ளாமல் , மாணவர்கள் அதிவேகத்தில் பைக்குகளை ஓட்டிச் செல்கின்றனர். நகர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பைக்குகளில் வேகமாக வலம் வருவதால் விபத்துக்கள் நடக்கின்றன. பலர் உயிரிழப்பதுடன், காயமும் அடைகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் போக்குவரத்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி தலைமையிலான போலீசார் நிரவி, கடற்கரை சாலை. திருநள்ளார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர்களை மடக்கி, பைக்கை பறிமுதல் செய்தனர்.இது குறித்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.