UPDATED : செப் 14, 2026 05:54 PM | ADDED : செப் 14, 2026 05:53 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தொடர் விடுமுறைகளுக்குப் பிறகு இன்று முதல் வேட்புமனு தாக்கல் களைகட்ட உள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்கள் புடைசூழ திரண்டு வந்து மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தட்டாஞ்சாவடி தொகுதிக்கு கடந்த 9-ம் தேதி அரசிதழில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் முறைப்படி தொடங்கியது என்றாலும், தொடக்க நாட்களில் பிரதான அரசியல் கட்சிகளோ அல்லது சுயேச்சை வேட்பாளர்களோ மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே கடந்த 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் வேட்புமனுக்கள் பெறும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக மனு தாக்கல் செய்யும் மையம் உற்சாகமின்றி சற்றே அமைதியாகவே காணப்பட்டது. பக்தியுடன் தொடங்கிய தேர்தல் பிரசாரம்: அரசு விடுமுறை நாட்களை வேட்பாளர்கள் வீணடிக்காமல் பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொண்டனர். வேட்புமனு படிவங்களைப் பெற்று, தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைச் சரிபார்த்துத் தயார் நிலையில் வைத்திருக்கின்றனர். மேலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைத் தங்களின் குலதெய்வ பாதங்களில் வைத்து மனமுருகி வழிபாடு செய்தனர். ஆன்மீக வழிபாட்டைத் தொடர்ந்து, இன்றும்(15ம்தேதி) மற்றும் நாளையும்(16ம் தேதி) தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ பிரம்மாண்ட ஊர்வலமாகச் சென்று ஜோசியர்கள் குறித்து கொடுத்த நேரத்தில் மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆயத்தமாகியுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள்: வேட்புமனுக்கள் பெறப்படும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர். மனு தாக்கல் நாளை 16 ம்தேதி மாலை 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. பரிசீலனை எங்கே: பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 17-ம் தேதி காலை 11 மணிக்கு தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெறும். நடைமுறையில் உள்ள தேர்தல் விதிகளின்படி வேட்பாளர்களும், அவர்களின் தகுதியுடைய பிரதிநிதிகளும் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். வாபஸ் காலகெடு: வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களில், போட்டியிட விரும்பாமல் மனுவைத் திரும்பப் பெற நினைப்பவர்கள் வரும் 19-ம் தேதி மாலை 3 மணிக்குள் அதற்கான அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும். தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஞானவேலுவிடம் இதற்கான கடிதத்தை வழங்க வேண்டும். மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும். இதைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கான ஓட்டுப்பதிவு அக்.6-ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் அக்.9-ம் தேதி எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளதைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் பிரசார சூடு தற்போதே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாக்ஸ் டெபாசிட் தொகை எவ்வளவு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பொதுப் பிரிவு வேட்பாளர்கள் 10,000 ரூபாயும், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு வேட்பாளர்கள் 5,000 ரூபாயும் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். தேர்தல் விதிமுறைகளின்படி, செல்லுபடியாகும் ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கைப் பெறத் தவறினால் வேட்பாளர்கள் செலுத்திய இந்த வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.