| ADDED : மார் 18, 2024 05:35 AM
புதுச்சேரி, : இரிடியம் கடத்தல் தொடர்பாக மாஜி முதல்வர் நாராயணசாமிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க., அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது; லோக்சபா தேர்தலில் பா.ஜ., மற்றும் காங்., கட்சியில் வேட்பாளர் தேர்வு செய்வதில் கோடிக்கணக்கான பணம் லஞ்சம் பெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தேர்தல் துறை விசாரிக்க வேண்டும். புதுச்சேரியில் இருடியம் கடத்தப்படுவதாக மாஜி முதல்வர் நாராயணசாமி பகீரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளார். ராக்கெட் தயாரிப்பில் இரிடியம் மிக முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய இருடியம் புதுச்சேரியில் இருந்து கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை, சி.பி.ஐ., பாதுகாப்பு அமைச்சகம், ஐ.பி., உள்ளிட்ட அதிகாரிகள் நாராயணசாமியிடம் விசாரிக்க வேண்டும். இரிடியம் தொடர்பான தகவல்களை மக்கள் மற்றும் நாட்டின் நலன் கருதி இந்த தகவல்களை நாராயணசாமி அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். இரிடியம் தொடர்பான புகார் விசாரிக்க சி.பி.ஐ., அமலாக்கதுறையில் அ.தி.மு.க., புகார் அளிக்கும். தேர்தல் பொதுக்கூட்டம் பிரசாரம் நடத்த நகர பகுதியில் ஏ.எப்.டி. திடல் மட்டுமே உள்ளது. தற்போது அங்கு பஸ் நிறுத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கின்றனர். தேர்தல் முடிந்த பிறகு ஏ.எப்.டி. மைதானத்தில் இருந்து பஸ் இயக்கலாம் என கூறினார்.