| ADDED : பிப் 21, 2024 09:07 AM
பாகூர் : கன்னியக்கோவில் - முள்ளோடை சாலையில் தனியார் ஒயின் ஷாப்பிற்காக சென்டர் மீடியன் அகற்றப்பட்டதை கண்டித்து பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.புதுச்சேரி - கடலுார் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, கன்னியக்கோவில் - முள்ளோடை வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டது.இச்சாலையில் உள்ள தனியார் ஒயின்ஷாப் எதிரே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்டர் மீடியன் தடுப்பு கட்டை அப்புறப்படுத்தப்பட்டது. இதனை கண்டித்து, பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் நிர்வாகிகள் ஓயின்ஷாப் எதிரே நேற்றிரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், அகற்றப்பட்ட சென்டர் மீடியன் பகுதியில் போலீசார் மூலம் பேரிகார்டு வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.