புதுச்சேரி: விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர், தமிழகத்தை சேர்ந்தவர்கள் வர வேண்டாம் என, சீனியர் எஸ்.பி., கலைவாணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நாளை (9ம் தேதி) த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுகூட்டம் நடக்கிறது. காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடத்த வேண்டும், 5000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கியூ.ஆர்.கோடுடன் பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என, ஐந்து நிபந்தனைகளுடன், கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், பொதுக்கூட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள்: புதுச்சேரியினருக்கு மட்டுமே அனுமதி த.வெ.க., கட்சியின் கோரிக்கையின்படி, புதுச்சேரியை சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அண்டை மாநிலமான தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் இங்கு வர வேண்டாம். சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை. பார்க்கிங் பொதுகூட்டத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த சிறப்பு இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாண்டி மெரினா வாகன நிறுத்தம், ஸ்டேடியம் பின்புற வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழைய துறைமுகப் பகுதி சாலை ஓரங்களிலோ அல்லது மைதானத்திற்கு உள்ளே வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் காவல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விஜய் பொதுக்கூட்டம் பள்ளிகள் பரிவிப்பு
பொதுக்கூட்டம் நடக்கும் உப்பளம் சாலையில் ஏராளமான தனியார் பள்ளிகள் உள்ளன. காலையில் எத்தனை மணிக்கு பொதுக்கூட்டம் துவங்கும், எத்தனை மணிக்கும் பொதுக்கூட்டம் நிறைவு பெறும், பள்ளி மாணவர்களுக்கான பாது காப்பு போன்ற என்ற அறிவுறுத்தல்கள் போலீசாரால் பள்ளிகளுக்கு இதுவரை தெரிவிக்கப்பட வில்லை. பள்ளி கல்வித்துறையும் சொல்லவில்லை. கரூர் சம்பவம் எதிரொலியால் இச்சாலையில் உள்ள தனியார் பள்ளிகள் பீதியில் உள்ளன. பொதுக்கூட்டம் நடக்கும் நாளை விடுமுறை விட வேண்டுமா இல்லையா என்பது தெரியாமல் பரிதவிப்பிற்குள்ளாகியுள்ளன. பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வருகின்றனர். உப்பளம் சாலையில் உள்ள பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்க பள்ளிகல்வித் துறை, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.