| ADDED : ஜன 31, 2024 02:21 AM
திருபுவனை : நான்கு வழிச்சாலையில், சர்வீஸ் சாலை வழியே சென்று பயணிகளை ஏற்றாத பஸ்களுக்கு வில்லியனுார் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மதகடிப்பட்டு, திருபுவனை, திருவாண்டார்கோவில், அரியூர், நவமால்காப்பேர் ஆகிய இடங்களில் மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், கண்டமங்கலம் ரயில்வே மேம்பால பணிகள் மட்டும் நிறைவுபெறாமல் உள்ளது.இந்த நிலையில் குறிப்பாக மேம்பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வெளியூர் செல்லும் ரூட் பஸ்கள் மற்றும் உள்ளூர் பஸ்கள் சர்வீஸ் சாலையில் சென்று, பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகளை ஏற்றாமல் மேம்பாலங்கள் வழியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் தினந்தோறும் பொது மக்கள், மாணவ, மாணவிகள் அவதியடைகின்றனர்.இந்நிலையில் நேற்று வில்லியனுார் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சர்வீஸ் சாலை வழியே செல்லாத பஸ்களை தடுத்து நிறுத்தி, அபராதம் விதித்தனர்.