உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மும்முனை போட்டிக்கு தயாராகும் தேர்தல் களம் வேட்பாளர் தேர்வில் இழுபறி தொடர்கிறது

மும்முனை போட்டிக்கு தயாராகும் தேர்தல் களம் வேட்பாளர் தேர்வில் இழுபறி தொடர்கிறது

வேட்பாளர் தேர்வில் கட்சிகள் திணறி வரும் சூழ்நிலையில், புதுச்சேரி லோக்சபா தேர்தல் களம் மும்முனை போட்டிக்கு தயாராகி வருகிறது.புதுச்சேரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., போட்டியிடுவது உறுதியாகி விட்டது. இதையடுத்து, வேட்பாளரை தேர்வு செய்யும் பணிகளில் அக்கட்சி தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை வேட்பாளராக நிறுத்த பா.ஜ., தலைமை விரும்புகிறது. ஆனால், தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பம் இல்லாததால், தான் போட்டியிட விரும்பவில்லை என நமச்சிவாயம் தெரிவித்து விட்டார்.இதையடுத்து, வேறு பெயர்களை அக்கட்சி பரிசீலித்து வருகிறது. பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், பா.ஜ., ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ., சிவசங்கர் உள்ளிட்டோர் தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.கூட்டணி கட்சி தலைவரான ரங்கசாமி, மக்களிடம் பிரபலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பா.ஜ.,வுக்கு சீட்டை விட்டு தர முன் வந்துள்ளார். இதனால், வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல் பா.ஜ., திணறி வருகிறது.

'இண்டியா' கூட்டணி

'இண்டியா' கூட்டணியில் காங்., கட்சி போட்டியிடுவதும் உறுதியாகி விட்டது. வேட்பாளராக தற்போதைய எம்.பி., வைத்திலிங்கத்தையே மீண்டும் நிறுத்த காங்., தலைமை திட்டமிட்டுள்ளது.காங்., கட்சியை பொருத்தவரை, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி., சீட் கேட்கிறார். முன்னாள் காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உள்ளிட்டோரும் விரும்புகின்றனர். கட்சி தலைமை உத்தரவிட்டால், தலைமைக்கு கட்டுப்பட்டு தேர்தலில் நிற்பது என வைத்திலிங்கம் முடிவு செய்துள்ளார்.

அ.தி.மு.க., 'ரெடி'

முக்கிய திருப்பமாக, இரு கூட்டணிகளுக்கு மத்தியில் அ.தி.மு.க.,வும் களம் இறங்க உள்ளது. அ.தி.மு.க., வேட்பாளராக, அக்கட்சியின் செயலாளர் அன்பழகனை நிறுத்துவதற்கு கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.சுவர் விளம்பரம் எழுதுவது உள்ளிட்ட பணிகளை அ.தி.மு.க.,வும் துவக்கி விட்டது. அ.தி.மு.க., தனியாக களம் இறங்குவது யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்ற விவாதம் சூடாக நடந்து வருகிறது. வேட்பாளர் தேர்வில் இழுபறியும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதனால், தேர்தல் களத்தில் சூடு பறக்க துவங்கி உள்ளது.

ராஜினாமா?

தேர்தலில் போட்டியிடுவதற்காக முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக, கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இதுவும் அரசியல் களத்தில் அனலை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை