உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2வது மெட்ரோ வழித்தடத்தில் 50 இடங்களில் வணிக வளாகம்

2வது மெட்ரோ வழித்தடத்தில் 50 இடங்களில் வணிக வளாகம்

சென்னை, ஆக. 23-சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பில், மொத்தம் 116 கி.மீ., துாரத்திற்கு, 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.மாதவரம் - சோழிங்கநல்லுார், மாதவரம் - சிறுசேரி, பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் ஆகிய மூன்று தடங்களில், தற்போது மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.மெட்ரோ ரயில் இயக்குவது மட்டுமின்றி, மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்று வழிகளில் வருவாய் திரட்ட, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மெட்ரோவில் ரயில் கட்டணம் மட்டுமின்றி, மாற்று வழிகளில் வருவாய் திரட்டும் வகையில், நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில்களில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், அடுத்தகட்டமாக மெட்ரோ நிலைய நுழைவு பகுதிகளை இணைத்து, வணிக பகுதிகளுக்காக ஒதுக்கி, பிரத்யேக வடிவமைப்புகளில் கட்டடங்கள் அமைக்கப்படும்.தனியார் அலுவலகங்கள், கடைகள், 'ஷாப்பிங் மால்'கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வளாகங்கள் அமைக்க உள்ளோம். இதற்கான, 50 மெட்ரோ ரயில் நிலையங்களை தேர்வு செய்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். வரும் 2028ல் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் போது, இந்த வணிக வளாகங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெங்களூருக்கு 160 கி.மீ., வேகத்தில் 'வந்தே பாரத்'

சென்னை - பெங்களூரு வழித்தடத்தில், 'வந்தே பாரத்' உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்கள், அடுத்த இரு ஆண்டுகளில் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட உள்ளன.தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:இந்த வகை ரயில்கள், அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும். தற்போது மணிக்கு 110 முதல் 130 கி.மீ., வேகத்தில் தான் செல்கின்றன.ரயில்வேயின் விதிப்படி, 'குரூப் - ஏ' வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ., வரையும், 'குரூப் - பி' வழித்தடத்தில் 130 கி.மீ., வரையும், ரயில்களின் வேகம் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.இதற்காக, சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் படிப்படியாக வளைவுகளை நீக்கி வருகிறோம். பழைய மேம்பாலங்களை அகற்றி, புதிதாக அமைத்து வருகிறோம். அடுத்த இரு ஆண்டுகளில், இந்த வழித்தடங்களில், 'வந்தே பாரத்' உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்களின் வேகத்தை, மணிக்கு 150 முதல் 160 கி.மீ., வரை அதிகரித்து இயக்குவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை