| ADDED : மார் 17, 2024 01:01 AM
சென்னை:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, விடையாற்றி கலை விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர், சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து காலை 7:00 மணி முதல் 7:30 மணி வரை, பக்தர்களின் சிவநாமம் விண்ணைப் பிளக்க கொடியேற்றம் நடந்தது. பின், பவழக்கால் விமான சேவை நடந்தது.நேற்று இரவு அம்மை, மயில் வடிவத்தில் சிவபூஜைக் காட்சியும், புன்னை, கற்பக, வேங்கை மர வாகன புறப்பாடும் நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு வெள்ளி சூரிய வட்டம், இரவு 9:00 மணிக்கு சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் 22ல் தேர்த்திருவிழா நடக்கிறது. காலை 9:00 மணிக்கு பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது.அதேபோல், திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோவிலில், இந்த ஆண்டிற்கான பங்குனி மாத பெருவிழா கொடியேற்றம், நேற்று இரவு 8:30 மணிக்கு மேல் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.விழாவின் முக்கிய நாளான, 22ம் தேதி காலை 6:30 மணிக்கு சந்திரசேகரர் தேர்த்திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.