| ADDED : பிப் 15, 2024 12:11 AM
சென்னை, டில்லி புறப்பட்ட விமானத்தின் அவசர கால கதவை பயணி திறக்க முயன்றதால், ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.சென்னை விமான நிலையத்தில் இருந்து டில்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்படத் தயாரானது. 159 பயணியர் அமர்ந்திருந்தனர்.விமானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. ஓடு பாதையில் இயக்குவதற்கு தயாரான நிலையில், திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறந்ததற்கான அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை நிறுத்தினர். அவசர கால கதவு அருகே உள்ள, இருக்கையில் அமர்ந்திருந்த பயணியிடம் விசாரித்தனர். அவசரகால கதவை தெரியாமல் அழுத்தி விட்டதாக பயணி தெரிவித்தார். அவரின் பயணத்தை ரத்து செய்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக, 158 பயணியருடன் டில்லிக்கு புறப்பட்டு சென்றது. உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சரோஸ் 27 என்பவர், சென்னையில் வேலையில் சேர்வதற்கான நேர்காணலுக்கு வந்து டில்லிக்கு திரும்ப விமானத்தில் வந்துள்ளார்.அவருக்கு இதுவே முதல் விமான பயணம் என்றும், தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும், போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.