உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அரை கி.மீ., சுற்றளவுக்கு நடைபாதை கட்டாயம் மெட்ரோ ரயில் நிலைய செலவில் சேர்க்க பரிந்துரை

 அரை கி.மீ., சுற்றளவுக்கு நடைபாதை கட்டாயம் மெட்ரோ ரயில் நிலைய செலவில் சேர்க்க பரிந்துரை

சென்னை: 'புதிதாக மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும்போது, அதன், அரை கி.மீ., சுற்றளவுக்கு முறையான நடைபாதை அமைப்பதற்கான தொகையை, கட்டுமான செலவில் சேர்க்க வேண்டும்' என, போக்குவரத்து குழுமமான கும்டா பரிந்துரைத்துள்ளது. சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள், நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இத்துடன் மேலும், 300 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, போக்குவரத்து செயல் திட்டத்தில், கும்டா அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில், விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பயணியர் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை குறைப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை, கும்டா அமைப்பு, மெட்ரோ ரயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் மெட்ரோ ரயில் திட்டங்கள், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மேற்பார்வையில் உள்ளன. இதை கருத்தில் வைத்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு, கும்டா அமைப்பு சில பரிந்துரைகளை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில், மெட்ரோ ரயில் நிலையங்களின், அரை கி.மீ., சுற்றளவில் முறையான நடைபாதை வசதிகள் ஏற்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இதற்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை கணக்கிட்டு, ரயில் நிலைய கட்டுமான செலவுக்கான பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும். அப்போது தான், ரயில் நிலைய கட்டுமானத்துடன் சேர்த்து நடைபாதைகள் அமைக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர். டிக்கெட் செலவு அதிகரிக்குமா? இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றி முறையான நடைபாதை அமைக்க வேண்டும் என்பது நல்லதுதான். ஆனால், இதற்கான தொகையை கட்டுமான செலவில் சேர்ப்பது, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில், சென்னையில் முதற்கட்ட வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களைவிட இரண்டாம் கட்டத்தில் அமைக்கப்படும் ரயில் நிலையங்களுக்கான அளவு, செலவுகள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரயில் நிலைய கட்டுமான செலவில், நடைபாதை செலவையும் சேர்ப்பது, டிக்கெட் கட்டண உயர்வுக்கு வழி வகுக்கும். அந்தந்த பகுதிக்கான உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவே, நடைபாதைகள் அமைக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை