பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொகுதியில் தேர்தலை முன்னிட்டு, ஓட்டுச்சாவடிகளில், 934 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 795 வாக்காளர்கள் உள்ளனர். நகரப்பகுதியில், 821, கிராமப்புற பகுதியில், 880 என, மொத்தம், 1,701 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.அதில், தொண்டாமுத்துார், 40, கிணத்துக்கடவு, 44, பொள்ளாச்சி, 29, வால்பாறை, 12, உடுமலை, 14, மடத்துக்குளம், 7 என, மொத்தம், 146 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் உள்ளதாக கண்டறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.தேர்தலின் போது, வீண் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், போலீசார், துணை ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடக்கிறது.அதிகாரிகள் கூறியதாவது:மிவும் பதட்டமான ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இங்கு நிகழும் நிகழ்வுகளை தேர்தல் ஆணையத்தில் இருந்தபடி, கவனிக்க இயலும் என்பதால் இவ்வாறான ஓட்டுச்சாவடிகளில், தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.பதட்டமான ஓட்டுச்சாவடிக்கு இரண்டும், மற்ற ஓட்டுச்சாவடிகளுக்கு ஒரு கேமரா வீதமும் பொருத்தப்படுகிறது.தொண்டாமுத்துாரில், 243, கிணத்துக்கடவில், 185, பொள்ளாச்சி, 124, வால்பாறை, 116, உடுமலை, 122, மடத்துக்குளம், 144 என மொத்தம், 934 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.இதன் வாயிலாக, அந்த ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.