பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோட்டத்தில், விதிமுறை மீறி அதிகளவு கனிமவளங்கள் எடுத்துச் சென்ற, வாகனங்களுக்கு மொத்தம், 14 லட்சத்து, 51 ஆயிரத்து, 572 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கோட்டத்தில், கிணத்துக்கடவு, வடக்கிப்பாளையம், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, அதிகளவு கனிமவளங்கள், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சொக்கனுார், நடுப்புணி, வடக்கிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர். அதில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த, லாரிகளை பறிமுதல் செய்தனர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,'வாகனங்களில் அதிகளவு பாரம் ஏற்றிச் செல்வது குறித்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. அதிக எடை ஏற்றியதாக மொத்தம், 24 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. தகுதிச்சான்று இல்லாது, வரி செலுத்தாதது உள்ளிட்ட காரணங்களுக்காக, 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், 196 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மொத்தம், 14 லட்சத்து, 51 ஆயிரத்து, 572 ரூபாய் அபராத தொகை மற்றும் வரி வசூலிக்கப்பட்டது.தொடர்ந்து விதிமீறல் குறித்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதுபோன்று செயலில் ஈடுபட்டால், வாகனங்களின் டிரைவர் லைசென்ஸ் தற்காலிக ரத்து மற்றும் வாகனத்தின் அனுமதி சீட்டு ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்,' என்றனர்.