| ADDED : ஜூன் 05, 2024 12:15 AM
சூலூர்:சின்னியம்பாளையம் ஊராட்சியில் ஒரு ஆண்டாக திரியும் குரங்கால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது, சின்னியம்பாளையம் ஊராட்சி. இங்குள்ள ஆசிரியர் நகர் பகுதியில், கடந்த ஓராண்டாக சுற்றித்திரியும் குரங்கால், குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பல முறை புகார் தெரிவித்தும், வனத்துறையினர் குரங்கை பிடிக்க, நடவடிக்கை எடுக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:எங்கள் பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் எங்கள் பகுதிக்கு ஒரு குரங்கு வந்தது. அன்று முதல் எங்களுக்கு பிரச்னைதான்.வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை தின்று விடுகிறது. ரோட்டில் செல்வோரையும், குழந்தைகளையும் கடிக்க வருகிறது. மின் வயர்களை நாசப்படுத்தி விடுகிறது.சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை பாழாக்கி விடுகிறது. பலமுறை பிடிக்க முயற்சி செய்தும் குரங்கு சிக்கவில்லை. வனத்துறையினரிடம் போனிலும், நேரடியாகவும் புகார் தெரிவித்தோம்.ஓரிரு முறை வந்து பார்த்தார்கள். குரங்கை கண்டுபிடிக்க முடியவில்லை என, கூறி சென்றுவிட்டனர். குரங்கின் தொந்தரவால் எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஓராண்டாகியும், குரங்கை பிடிக்காமல் வனத்துறையினர் அலட்சியமாக உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.