உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாறை வெடிக்க பதுக்கிய வெடி பொருட்கள் பறிமுதல் இருவர் கைது; சம்பவத்தை மறைக்க ஆளுங்கட்சி முயற்சி

பாறை வெடிக்க பதுக்கிய வெடி பொருட்கள் பறிமுதல் இருவர் கைது; சம்பவத்தை மறைக்க ஆளுங்கட்சி முயற்சி

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, பாறை வெடிக்க பயன்படுத்தும் வெடி மருந்துகளை அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து, வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கணபதிபாளையம், டி.எஸ்.ஏ., நகர் தோட்டத்துச்சாலையை சேர்ந்தவர் தளபதி,71. இவரது தோட்டத்தில் பாறை வெடிக்க பயன்படுத்தும் வெடிமருந்துகள் வைத்துள்ளதாக, ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், அனுமதியின்றி பதுக்கி சட்ட விரோதமாக வெடி பொருட்களை பதுக்கி வைத்து, அரசு அனுமதி பெறாமல் பாறை உடைத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும், கெட்டிமல்லன்புதுாரை சேர்ந்த ராமசாமி,50, கம்பரசர் டிராக்டர் பயன்படுத்தி வெடிப்பதற்கான ஒயர்களை குழி தோண்டி புதைப்பதற்காக உதவியது தெரிய வந்தது.இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், ஜெலட்டின் குச்சிகள் - 950, டெட்டனேட்டர் - 170, வெடிமருந்து குப்பிகள் - 170, மற்றும் கம்பரசர் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.உடுமலையை சேர்ந்த செல்வராஜ் வெடிமருந்து சப்ளை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், முழு விபரங்களை தெரிவிக்காமல், போலீசார் ரகசியம் காப்பதால், சர்ச்சை கிளம்பியுள்ளது. இதன் பின்னணியில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு முறை அபராதம் விதிப்பு

வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், 'கணபதிபாளையத்தில், தளபதி என்பவரின் தோட்டத்தில் ஏற்கனவே அனுமதியின்றி பாறைக்கு வெடி வைத்து தகர்க்கப்பட்டது. கடந்த நவ., மாதம் ஆய்வு செய்து, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.தற்போது, மீண்டும் வருவாய்துறையிடம் கிணறு வெட்ட மற்றும் பாறை உடைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை. இதுபற்றி ஆனைமலை போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

ஆளுங்கட்சி ஆதிக்கம்

செய்தி சேகரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற நிருபர்களை காத்திருக்குமாறு கூறிய போலீசார், அரசியல் கட்சியினர் உள்ளே செல்ல அனுமதித்தனர். இதுபற்றி நிருபர்கள் விசாரித்த போது, எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ், நிருபர்கள் அடையாள அட்டை அணிந்து வாங்க, அப்பதானே அடையாளம் தெரியும் எனக்கூறினார்.ஆனால், ஆளுங்கட்சியினருக்கு 'சலாம்' போட்டு வரவேற்று, ஸ்டேஷனுக்குள் அனுப்பினார். வெடிபொருள் பறிமுதல் பற்றிய தகவல் வெளியில் கசிய கூடாது, எதையும் பறிமுதல் செய்யக்கூடாது, யாரையும் கைது செய்யக்கூடாது என, ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது.

அனுமதியற்ற குவாரியா?

ஆனைமலை பகுதிகளில், விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக கல் குடைத்து கேரளாவுக்கு எடுத்துச் செல்வதாக புகார்கள் எழுந்தன. கடந்த ஜன., மாதம் பொள்ளாச்சி வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள், கல்குவாரி, கிரஷர் உரிமையாளர் சங்கம் சார்பில், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.இந்நிலையில், தமிழக - கேரளா எல்லையொட்டியுள்ள கணபதிபாளையத்தில் தோட்டத்தில் இருந்து, குவாரி போன்று பாறை வெட்டி கடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தனிப்பிரிவுக்கு 'கவனிப்பு'

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தனியார் கல்குவாரி வளாகத்தில் இருந்த, வெடிபொருள் சேமிப்பு கிடங்கில், கடந்த, 1ம் தேதி, வெடி விபத்து ஏற்பட்டு மூன்று பேர் இறந்தனர். இந்த பரபரப்பே இன்னும் ஓயவில்லை.இந்நிலையில், உள்ளூர் போலீசாருக்கு 'கப்பம்' கட்டி ஆனைமலை சுற்றுப்பகுதியில், பல கல்குவாரிகள் அத்துமீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி, பல புகார்கள் பெறப்பட்டாலும், மாவட்ட எஸ்.பி., கவனத்துக்கு கொண்டு செல்லாமல் தனிப்பிரிவு போலீசாரும் 'கவனிப்பு' பெறுவதாக புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ