உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 15 நாட்களில் கிடைத்து விடும் சிட்டாக நடக்கும் பட்டா மாறுதல்!பிற சான்றிதழ்களுக்கு 20 நாள் :மாவட்ட வருவாய் அலுவலர் உறுதி

15 நாட்களில் கிடைத்து விடும் சிட்டாக நடக்கும் பட்டா மாறுதல்!பிற சான்றிதழ்களுக்கு 20 நாள் :மாவட்ட வருவாய் அலுவலர் உறுதி

கோவை:வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல், 15 நாட்களில் வழங்க வேண்டும் என்று, மாவட்ட வருவாய் அலுவலர் அனைத்து அதிகாரிகளுக்கும், உத்தரவு பிறப்பித்துள்ளார்.கோவையில் அரசு சேவைகளும் மக்களுக்கு விரைவாகக் கிடைப்பதில்லை. மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை; எத்தனை முறை மனு கொடுத்தாலும் சரியான பதில் இல்லை என்று, மனுதாரர்கள் புகார் வாசிக்கின்றனர்.

ஆனாலும் நடவடிக்கை இல்லை

மனுக்களை உடனடியாக முடிக்கச் சொல்லி, மேலிடம் அழுத்தம் தருவதால், புகார் மீது தற்காலிக நடவடிக்கை எடுப்பது அல்லது நடவடிக்கை எடுப்பதுபோல காட்டிக்கொள்வது, காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அரசின் சேவைகளை, குறிப்பிட்ட காலத்துக்குள் பெறுவதற்கு, சேவை பெறும் உரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசு, மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லையென்றால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது.இச்சட்டம் அமல்படுத்தப்பட்டால், அரசின் அனைத்துச் சேவைகளும் விண்ணப்பித்த நாளிலிருந்து, குறிப்பிட்ட நாளுக்குள் கிடைக்கச் செய்தாக வேண்டும்.இதன்படி, ரேஷன் கார்டு, 30 நாள், வாரிசுச் சான்று, 15 நாள், நிலப்பட்டா - பட்டா மாறுதல், பெயர் மாற்றம், 15 நாள், உட்பிரிவு செய்தல், 30 நாள், இறப்புச் சான்றிதழ், 7 நாள், வருவாய் சான்றிதழ், 15 நாள், ஜாதிச்சான்று ஏழு நாள், மின் இணைப்பு, 14 நாள், குடிநீர் இணைப்பு,7 நாள் என காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காலத்துக்குள் சான்றிதழ் கிடைக்காமல், விண்ணப்பதாரர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் உள்ளது.

15 நாட்களில் கிடைக்கும்

இச்சூழலில் ஜாதி, வருவாய் உள்ளிட்ட, 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் மனு மீது அதிகபட்சம், 15 நாளில் முடிவெடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறைக்கு, வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர் உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து, கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறியதாவது:தமிழக அரசின் நில வருவாய்துறை கமிஷனரின் உத்தரவுப்படி, வருவாய்த்துறை பணிகளை வேகமாக முடித்து, மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அரசு உத்தரவுப்படி, 15 நாட்களில் பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவைகள், இனி மக்களுக்கு கிடைக்கும். உட்பிரிவு பணிகள் மட்டும் 30 நாட்களாகும். விரைவான சேவை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே, வருவாய்த்துறையின் குறிக்கோள். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை