UPDATED : டிச 25, 2025 08:12 AM | ADDED : டிச 25, 2025 06:09 AM
வால்பாறை: வால்பாறையில் நேற்று காலை தேயிலை எஸ்டேட்டில் சுற்றிய மான்களை சுற்றுலா பயணியர் கண்டு மகிழ்ந்தனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு நேற்று முதல் ஜன., 4ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்துள்ளனர். இந்நிலையில், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு அருகே உள்ள தேயிலை எஸ்டேட்டில் நேற்று காலை மான்கள் உலா வந்தன. ரோட்டை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற மான்களை, அந்த வழியாக வந்த சுற்றுலா பயணியர் கண்டு மகிழ்ந்தனர். சிலர் போட்டோ எடுத்தனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வழிதெரியாமல் வந்த மான்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லவும், தண்ணீர் குடிக்கவும் பகல் நேரத்தில் ரோட்டை கடக்கும். இது போன்ற சூழலில், சுற்றுலா பயணியர் வனவிலங்குகளுகளை இடையூறு செய்யாமலும், வாகனங்களை நிறுத்தி, ஓரமாக நின்று கண்டு ரசிக்கலாம். எந்த சூழ்நிலையிலும் இடையூறு ஏற்படுத்த கூடாது,' என்றனர்.