உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிகிச்சையில் சிறுமி போலீஸ் கமிஷனர் ஆறுதல்

சிகிச்சையில் சிறுமி போலீஸ் கமிஷனர் ஆறுதல்

கோவை : போலீஸ் கமிஷனரின் பரிந்துரைப்படி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஏழு வயது சிறுமி குணமடைந்து வருகிறார். இச்சிறுமியை, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். கோவை, சிவானந்தா காலனியை சேர்ந்தவர்கள் ஜேம்ஸ், சைலஜா தம்பதி. இவர்களது மகள் ஜின்சா மோல்(7); தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், பள்ளியில் இருந்து வரும்போது கீழே விழுந்து ஜின்சா மோல் காயமடைந்தார். சிவானந்தா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு 'தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தையின் இடது கை ஆள்காட்டி விரல் கருகி விரலை அகற்றும் நிலையில் ஏற்பட்டு விட்டது, மருத்துவமனை டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சிறுமியின் பெற்றோர்,கோவை போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரியிடம் புகார் அளித்தனர். சிறுமியின் நிலை அறிந்த கமிஷனர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற பரிந்துரைத்தார். அக்குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார். கடந்த 2 நாட்களாக அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில், டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் சிறுமி குணமடைந்து வருகிறார். தகவலறிந்து கமிஷனர் அமரேஷ் புஜாரி, நேற்று அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு குழந்தையை சந்தித்து நலம் விசாரித்ததோடு, சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். சிகிச்சை அளித்த கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் டாக்டர்களையும் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை