உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகளிடம் நேரடி தேங்காய் கொள்முதல் இரண்டு மாதத்தில் ரூ.40 லட்சம் வர்த்தகம்

விவசாயிகளிடம் நேரடி தேங்காய் கொள்முதல் இரண்டு மாதத்தில் ரூ.40 லட்சம் வர்த்தகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், விவசாயிகளிடம் இருந்து வெளிமார்க்கெட் விலைக்கு நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. பொள்ளாச்சி கூட்டுறவு விற்பனை சங்கம் (பி.சி.எம்.எஸ்.,) வெளிமார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப விவசாயிகளிடம் நேரடி தேங்காய் கொள்முதலை ஜூலையில் துவங்கியது. வெளிமார்க்கெட்டில் தேங்காய் எண்ணெய் விலைக்கு ஏற்ப கொப்பரை, தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது பறித்து உரிக்கப்பட்ட தேங்காய் டன்னுக்கு 16 ஆயிரத்து 500 முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கிறது. அதற்கேற்ப தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர். பொள்ளாச்சி கூட்டுறவு விற்பனை சங்க தனி அலுவலர் ராதாகிருஷ்ணன், விற்பனை அபிவிருத்தியாளர் தங்கவேல் கூறியதாவது: விவசாயிகள் பறித்து வைத்திருக்கும் தேங்காய்க்கும், மரத்தில் இருந்து பறித்துக்கொள்வதற்கும் வெளிமார்க்கெட் விலைக்கு ஏற்ப தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. விவசாயிகளே நேரடியாக தேங்காயை விற்பனை செய்யும்போது இடைத்தரகர்கள் தவிர்க்கப்பட்டு, தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகள் போனில் தகவல் தெரிவித்தால், மரத்தில் இருந்து தேங்காய் பறிப்பதற்கு ஆள் அனுப்புகிறோம். கொள்முதல் செய்த தேங்காயை உரித்து டன் கணக்கில் விற்பனைக்கு அனுப்புகிறோம். விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் விலை உயர்ந்த பின் விற்பனை செய்ய நினைக்கும் விவசாயிகள் தேங்காயை இருப்பு வைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேங்காய் இருப்பு வைக்கும் விவசாயிகள் பொருளீட்டுக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.கடந்த இரண்டு மாதங்களில் 200 டன் தேங்காய் விற்பனை செய்யப்பட்டுள்ளது; 40 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை