ஒரு பிளாட் வாங்கும் முன், என்னென்ன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என விளக்குகிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க (காட்சியா) உறுப்பினர் டேனியல். விற்பனை பத்திரம்
விற்பனை பத்திரம் என்பது, சொத்துக்களின் உரிமையை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கும் போது, சட்டபூர்வமாக மாற்றி எழுதப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஆவணத்தில் சொத்தை பற்றிய அனைத்து விபரங்களும் இருக்கும். சொத்தை வாங்குவதற்கு முன் சரி பார்க்க வேண்டும். கட்டட அனுமதி
நாம் வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்துக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். அப்ரூவல் பிளானில் உள்ளது போல், அரசு விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டிருக்க வேண்டும். கட்டட நிறைவுச் சான்று
கட்டுமான பணி நிறைவடைந்திருந்தால், அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு நிறைவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கட்டுமான உடன்படிக்கையில், உங்களது குடியிருப்பு எண் அடிப்படையில் எத்தனை அறைகள் உள்ளன என்பது இருக்கும்.கட்டுமான உடன்படிக்கையில் உள்ளது போல் டைல்ஸ், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், பிட்டிங்ஸ், கதவு, ஜன்னல் போன்றவை கட்டப்பட்டு உள்ளதா என்பதை அறிய வேண்டும்.அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் வாங்கும் பொழுது, அதில் இயற்கை ஒளி, காற்றோட்டம், குடி தண்ணீர் வசதி, ஆர்.ஓ., அல்லது சாப்டனர், எஸ்.டி.பி., கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, பாதாள சாக்கடை, நிலத்தடி நீர், வடிகால் அமைப்பு உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதே போல், மழை நீர் வடிந்து செல்ல வழிகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.விதிப்படி கார் நிறுத்துமிடம் ஏற்படுத்தி தர வேண்டும். வாகனம் சுற்றிவர போதிய வசதிகள் இருக்க வேண்டும். சொத்து வரி, மின் இணைப்பு எண், வீட்டு உரிமையாளர் பெயரில் மாற்றம் செய்திருக்க வேண்டும்.ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பிளாட் வாங்கும் பொழுது அந்த கட்டடம் ஏரி, குளம் போன்ற நீர்நிலை அருகாமையில் இல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. எங்கு வாங்கலாம்?
மனையின் மதிப்பு ஏறுமுகமாகவும், வீட்டின் மதிப்பு இறங்கு முகமாகவும் இருக்கும் என்பது பொதுவான கருத்து. யு.டி.எஸ்., கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ள குடியிருப்புகளில், வீடு வாங்குவது உகந்தது.வீடு வாங்கும் போது, விற்பனை பத்திரம், டைட்டில் டீட், வில்லங்கச்சான்று, கட்டட கட்டுமான ஒப்பந்தம், கட்டட வரைபட அனுமதி, கட்டட நிறைவு சான்றிதழ், அலாட்மென்ட் மற்றும் பொசசன் லெட்டர் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.