| ADDED : ஜன 02, 2024 11:55 PM
கோவை;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட சில இடங்களில் மண் பாண்டங்கள் செய்பவர்கள், பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு அடி முதல் பெரிய அளவிலான பானைகள் வரை தயாரிக்கப்படுகின்றன. இப்பானைகள், 35 முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.பருவநிலை காரணமாக, கடந்த சில வாரங்கள் தொடர்ந்து மழை பெய்ததாலும், தொடர் மேக மூட்டம் காரணமாகவும், பானை தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டது. தற்போது வெயில் தலைகாட்ட துவங்கியுள்ளதால், தொழில் சூடு பிடித்துள்ளது.இதுகுறித்து, மண் பானை தொழிலாளர் ஜெயந்தி கூறியதாவது:கவுண்டம்பாளையம் பகுதியில், 40 குடும்பங்கள் மண் பாண்டங்கள் தயாரித்து வருகிறோம். கணுவாய் பகுதியில் மண் எடுக்க அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால், மண் கிடைப்பதில்லை. தொழிலுக்கு தேவையான மண் வாங்குவதற்கே, கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.தற்போது, பொங்கலுக்கான பானை தயாரித்து வருகிறோம்.இத்தொழிலுக்கு தேவையான மண் மற்றும் அரவை இயந்திரம், கலவை இயந்திரங்களை அளித்து, எங்கள் வாழ்வாதாரம் காக்க அரசு உதவ வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.