கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கம்பன் வீதி மற்றும் அண்ணாநகர் பகுதியில் அடிக்கடி 'பவர் கட்' ஏற்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, கம்பன் வீதி மற்றும் அண்ணாநகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, அடிக்கடி 'பவர் கட்' ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இந்த இரண்டு பகுதியிலும் அதிகப்படியான குழந்தைகள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வசிக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக, நான்கு முதல் ஐந்து முறை 'பவர் கட்' ஏற்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.மக்கள் கூறியதாவது:கம்பன் நகர், அண்ணா நகர் பகுதியில், தினமும், நான்கு அல்லது ஐந்து முறை 'பவர் கட்' ஏற்படுகிறது. சில நேரங்களில் குறைவான மின் அழுத்தமே உள்ளது. தற்போது பள்ளி மாணவர்களுக்கான தேர்வு காலம் என்பதால், மின் தடை ஏற்படுவது பெரும் பிரச்னையாக உள்ளது.'பவர் கட்' ஏற்பட்ட பின், மீண்டும் மின் வினியோகம் செய்ய நான்கு மணி நேரமாகிறது. இது குறித்து மின்துறை அலுவலகத்தில் புகார் தெரிவிக்க போன் செய்தால், முறையான பதில் இல்லை.எனவே, இணையவழி புகார் அளிக்கும் நிலை ஏற்படுகிறது. அதன்பிறகே, மின் துறை அலுவலர்கள் 'பவர் கட்' ஏற்பட்டதை சீரமைக்கின்றனர். எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, கூறினர்.மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கிணத்துக்கடவு, கம்பன் வீதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்திருந்தது. மின் பணியாளர்கள் வேறு வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.அப்பகுதிக்கு உரிய மின் பணியாளர் விடுப்பில் இருப்பதால், அப்பகுதியில் மின் தடை சரி செய்ய காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். டிரான்ஸ்பார்மர் பிரச்னையை தற்காலிகமாக சரி செய்துள்ளோம். இந்த பகுதியில் நிலவும் மின் பிரச்னைக்கு, ஒரு சில நாட்களில் நிரந்தரமாக தீர்வு காணப்படும்,' என்றனர்.