உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தம்பதியின் வங்கி கணக்கில் தவறாக ரூ.2 லட்சம் டெபிட் இழப்பீடு வழங்க உத்தரவு

தம்பதியின் வங்கி கணக்கில் தவறாக ரூ.2 லட்சம் டெபிட் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை;தம்பதியின் வங்கி கணக்கிலிருந்து தவறாக, இரண்டு லட்சம் ரூபாய் 'டெபிட்' ஆனதால், இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டது.கோவை, பீளமேடு புதுார் ஆர்.கே.மில்ஸ் காலனியை சேர்ந்த ராஜேந்திரன்- ராதிகாதேவி தம்பதியினர், டாக்டர் நஞ்சப்பா ரோட்டிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், கூட்டு சேமிப்பு கணக்கு வைத்து இருந்தனர். இவர்களது வங்கி கணக்கில் 2.55 லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருந்த நிலையில், கடந்த 2022, மே, 17ல், தானியங்கி பற்று வாயிலாக இரண்டு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக மொபைல் போனிற்கு குறுஞ்செய்தி வந்தது.வங்கி கணக்கு விவரத்தை பார்த்த போது, மேற்கண்ட தொகை, ஸ்டேட் வங்கியின் காப்பீடு நிறுவனத்தின் பெயருக்கு எடுக்கப்பட்டதும், அத்தொகை, ராஜேந்திரன் தம்பதியின் வங்கி கணக்கிலிருந்து, மற்றொரு நபரின் காப்பீட்டிற்கு தவறுதலாக பணம் மாற்றப்பட்டதும் தெரிய வந்தது. வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, தவறுதலாக எடுக்கப்பட்ட பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்து விடுவதாக கூறினர். ஆனால், பல நாட்களாகியும் வரவு வைக்கப்படவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் தம்பதி, கோவை நுகர்வோார் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரணையின் போது, தவறுதலாக எடுக்கப்பட்ட பணத்தை ராஜேந்திரன் வங்கி கணக்கிற்கு வட்டியுடன் சேர்ந்து மாற்றப்பட்டு விட்டதாக பதில் மனு தாக்கல் செய்தனர்.விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் தங்கவேல், ''வங்கி நிர்வாகம் சேவை குறைபாடு செய்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு மன உளச்சலுக்கு இழப்பீடாக, 35,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி